கொலம்பியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தயராக இருப்பதாக மிரட்டல் விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, அந்நாட்டு அதிபர் குஸ்டாவோ பெட்ரோ சவால் விடுத்துள்ளார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா சிறைபிடித்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வெனிசுலாவை தொடர்ந்து அதிபர் டிரம்ப் கொலம்பியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். அதாவது, கோகைன் தயாரிப்பதையும், அதை அமெரிக்காவிற்கு விற்பனை செய்வதையும் விரும்பும் ஒரு மோசமான நபரின் மூலம் லத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியா நடத்தப்படுகிறது” என டிரம்ப் செய்தியாளர் சந்திப்பின்போது ஓபனாக குற்றம்சாட்டினார்.
ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், கொலம்பியாவின் தலைமையை, குறிப்பாக அதிபர் குஸ்டாவோ பெட்ரோவை கடுமையாக விமர்சித்தார். “கொலம்பியாவும் மிகவும் பாழ்பட்டிருக்கிறது. கோகைன் தயாரித்து அமெரிக்காவிற்கு விற்பனை செய்ய விரும்பும் ஒரு தீயவரால் அது நடத்தப்படுகிறது. இது நீண்ட காலம் நீடிக்காது” என்றார். கொலம்பியாவுக்கு எதிராக அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்குமா என்று நேரடியாகக் கேட்கப்பட்டபோது, டிரம்ப், “அது எனக்கு நல்லதாகவே தோன்றுகிறது.. அதனால் அதை செய்யலாம்” என்று பதிலளித்திருந்தார்.
இந்தநிலையில், டிரம்பின் இந்த மிரட்டலுக்கு கொலம்பிய அதிபர் குஸ்டாவோ சவால் விடுத்துள்ளார். வெனிசுலா அதிபர் மதுரோவை கைது செயததைபோல முடிந்தால் தன்னையும் கைது செய்து பார் என சவால் விடுத்துள்ளார். மேலும், டிரம்பை கோழை என சொன்ன அவர், உண்மையை நேருக்கு நேர் அமர்ந்து பேச அழைப்பும் விடுத்துள்ளார்.
மேலும், “ஒரு வேளை அமெரிக்கா என்னை கைது செய்தால், கொலம்பியா மக்கள் எனக்காக வீதிகளில் இறங்கி போராடுவார்கள்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
