உணவு மற்றும் குளிர்பானத் துறையின் மாபெரும் நிறுவனமான Nestle , செவ்வாய்க்கிழமை அன்று தனது முக்கியமான சில குழந்தை ஊட்டச்சத்து தயாரிப்புகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இந்த தயாரிப்புகளில், குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்படுத்தக்கூடிய ஒரு விஷப்பொருள் இருக்கக்கூடும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
திரும்பப் பெறப்பட்ட தயாரிப்புகளில் SMA, BEBA மற்றும் NAN என்ற பிராண்டுகளின் கீழ் விற்பனை செய்யப்படும் குழந்தை பால் கலவைகள் (infant formula) மற்றும் தொடர்ந்து பயன்படுத்தப்படும் பால் கலவைகள் (follow-on formula) அடங்கும்.
இந்த தயாரிப்புகள் பெரும்பாலும் ஐரோப்பாவில் விற்பனை செய்யப்படுகின்றன. இருப்பினும், உலகம் முழுவதும் எங்கு விற்பனை செய்யப்பட்டுள்ளனவோ அங்கு அனைத்திலும் திரும்பப் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று நெஸ்லே அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
நிறுவனம் என்ன கூறியது? ஒரு முக்கிய விநியோகஸ்தரிடமிருந்து பெறப்பட்ட மூலப்பொருளில் தரக் குறைபாடு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தை ஊட்டச்சத்துப் பொருட்களிலும் பயன்படுத்தப்பட்ட அரச்சிடோனிக் அமில எண்ணெய் மற்றும் அது தொடர்பான எண்ணெய் கலவைகள் குறித்து நெஸ்லே ஒரு விசாரணையைத் தொடங்கியது.
திரும்பப் பெறப்பட்ட எந்த தயாரிப்புகளுடனும் தொடர்புடைய நோய்கள் அல்லது அறிகுறிகள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று நெஸ்லே தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், டிசம்பர் மாதத்தில் குறைந்த அளவில் தொடங்கப்பட்ட இந்த திரும்பப் பெறும் நடவடிக்கை, தற்போது பெரிய அளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
https://x.com/NestleUKI/status/2008259968814768506?
ஆஸ்திரிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இந்த திரும்பப் பெறும் நடவடிக்கை 10-க்கும் மேற்பட்ட நெஸ்லே தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட 800-க்கும் அதிகமான தயாரிப்புகளை பாதிக்கிறது. இது நெஸ்லே நிறுவனத்தின் வரலாற்றிலேயே மிகப் பெரிய தயாரிப்பு திரும்பப் பெறும் நடவடிக்கையாக விவரிக்கப்படுகிறது.
பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு உபயோகிக்கக் கூடாத தயாரிப்புகளின் பேட்ச் (batch) எண்களின் பட்டியலை நெஸ்லே வெளியிட்டுள்ளது. மேலும், விநியோகத்தில் ஏற்படக்கூடிய எந்த இடையூறுகளையும் குறைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொடி வடிவ குழந்தை பால் கலவைகள் (powdered formula) பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், பெட்டி அல்லது பேக்கின் அடிப்பகுதியில் உள்ள குறியீட்டை (code) சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
தயார் நிலையில் பயன்படுத்தப்படும் பால் கலவைகள் (ready-to-feed formula) தொடர்பாக, வெளிப்பெட்டி மற்றும் கன்டெய்னரின் பக்கவாட்டில் அல்லது மேல்பகுதியில் உள்ள குறியீட்டை சரிபார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Bacillus cereus என்ற பாக்டீரியாவின் சில வகைகள் உற்பத்தி செய்யும் cereulide எனப்படும் ஒரு விஷப்பொருள் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் காரணமாக, ஆஸ்திரியா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, நோர்வே, சுவிட்சர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் (UK) ஆகிய நாடுகளில் இந்த தயாரிப்புகளை நெஸ்லே திரும்பப் பெற்றுள்ளது.
ஐக்கிய இராச்சியத்தின் உணவு தரநிலைகள் முகமை (UK Food Standards Agency) தெரிவித்ததின்படி, இந்த விஷப்பொருள் சமைத்தல், கொதிக்க வைப்பது அல்லது பாலை தயாரிக்கும் போன்ற எந்த செயல்முறைகளாலும் அழிக்கப்படாது.
இதனை உட்கொண்டால், வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுவலி (stomach cramps) போன்ற அறிகுறிகள் விரைவாக ஏற்படலாம் என்றும் அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.
அதே நேரத்தில், நோர்வே உணவு பாதுகாப்பு ஆணையம் (Norwegian Food Safety Agency), இது உடனடி மற்றும் தீவிரமான உடல்நல ஆபத்தை ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளது.
