சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஈரான் விவகாரத்தில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நிலைப்பாட்டிற்கு சீனா தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா காமேனி (Mojtaba Khamenei) புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், ஈரானின் புதிய தலைமை யாராக இருந்தாலும் அவர்களை இலக்கு வைப்போம் என இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன், எந்தவொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களிலும் தலையிட யாருக்கும் உரிமை இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஈரானின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது என்பது அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட இறையாண்மை சார்ந்த விஷயம் என்று சீனா குறிப்பிட்டுள்ளது. “ஈரானின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு முழுமையாக மதிக்கப்பட வேண்டும்; எக்காரணத்தைக் கொண்டும் மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதை சீனா ஏற்காது” என்று பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். குறிப்பாக, ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முனையும் அமெரிக்காவின் ‘தந்திரோபாய நகர்வுகளையும்’ சீனா வன்மையாகக் கண்டித்துள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றத்தைக் குறைக்க அனைத்து தரப்பினரும் உடனடியாகப் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் எனச் சீனா வலியுறுத்தியுள்ளது. “வல்லமை என்பது சரியான நீதியாகாது; உலகம் மீண்டும் ஒரு காட்டுமிராண்டித்தனமான சட்டத்திற்குள் தள்ளப்படக் கூடாது” எனச் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி எச்சரித்துள்ளார். தற்போதைய போர் சூழல் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதால், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும் என்றும் சீனா கேட்டுக்கொண்டுள்ளது.
