ஈரானில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வருவதால், இணையம் மற்றும் தொலைபேசி அழைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம் போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து குறைந்தது 62 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை, அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களின் போது வன்முறையைத் தூண்டியதாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய பயங்கரவாத முகவர்களை அரசு ஊடகங்கள் குற்றம் சாட்டின.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கடுமையாக விமர்சித்துள்ளார். அவரை அகங்காரம் பிடித்தவர் என்று கூறிய அவர், ஈரானியர்களின் இரத்தத்தால் டிரம்பின் கைகள் கறைபடிந்துள்ளன என்றும் குற்றம் சாட்டினார். ஈரானில், டிசம்பர் 28, 2025 அன்று தெஹ்ரானில் உள்ள இரண்டு சந்தைகளில் தொடங்கிய போராட்டங்கள், அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் ரியாலின் மதிப்பு வீழ்ச்சிக்கு எதிராக நாடு தழுவிய இயக்கமாக வளர்ந்துள்ளன. கமேனி தலைமையிலான மத அரசாங்கத்திற்கு எதிரான அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில் இந்த போராட்டங்கள் நடைபெறுகின்றன.
ஈரானின் அரசு ஊடகங்கள் உயிரிழப்புகள் குறித்து மௌனம் காத்து வந்தன, ஆனால் வெள்ளிக்கிழமை அந்த மௌனத்தைக் கலைத்து, மேலதிக விவரங்கள் எதையும் வழங்காமல் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தன. கடந்த மாதம் போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலர்களின் செய்தி நிறுவனமான ‘ஹ்ரானா’ (HRANA), ஈரானில் நாடு தழுவிய போராட்டங்களில் 65-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தப் போராட்டங்கள் ஜனவரி 9ஆம் தேதி அன்று 13-வது நாளை எட்டின. அந்த அறிக்கையின்படி, இந்தப் போராட்டங்கள் 31 மாகாணங்களில் உள்ள 180 நகரங்களில் 512 இடங்களுக்குப் பரவியுள்ளன. நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தகுதிவாய்ந்த பாதுகாப்பு அதிகாரிகளால் இணையதளச் சேவையைத் துண்டிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக அந்நாட்டின் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
துபாய் விமான நிலைய இணையதளத்தின்படி, துபாய் மற்றும் ஈரானுக்கு இடையேயான குறைந்தது 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஈரானில் நிலவி வரும் தொடர் அமைதியின்மையின் காரணமாக, துருக்கிய ஏர்லைன்ஸ் நிறுவனமும் ஈரான் வழியாகச் செல்லும் பல விமானங்களை ரத்து செய்துள்ளது.
