ஈரான் உடனான ராணுவ மோதலில் அமெரிக்கா மிக விரைவில் முழுமையான வெற்றியை அடையப்போவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்,

நெவாடா மாகாணத்தின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த இரண்டு மாதங்களாக வளைகுடா பகுதியில் அமெரிக்கப் படைகள் தீவிரமாகக் களம் கண்டு வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், ஈரானின் ராணுவக் கட்டமைப்பு தற்போது நிலைகுலைந்துள்ளதாகக் கூறினார். ஈரான் மக்கள் திறமையான போராளிகள் என்பதை ஒப்புக்கொண்ட டிரம்ப், அவர்களின் தற்காப்புத் திறன் தற்போது முற்றிலுமாக முறியடிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.

ஈரானின் கடற்படை பலம் குறித்துப் பேசிய டிரம்ப், அந்நாட்டின் சுமார் 158 போர்க்கப்பல்கள் தற்போது கடலுக்கு அடியில் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக அதிரடி தகவலை வெளியிட்டார். இனி ஈரானிடம் குறிப்பிடும்படியான கடற்படையே இல்லை என்று சாடிய அவர், கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட துணிச்சலான ராணுவ நடவடிக்கைகளையும் நினைவு கூர்ந்தார். குறிப்பாக, உலகின் மிக மோசமான பயங்கரவாதி என்று டிரம்பால் வர்ணிக்கப்பட்ட ஈரான் கமாண்டர் காசிம் சோலைமணி கொல்லப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், அத்தகைய கடுமையான நடவடிக்கைகள் மூலமே ஈரான் பலவீனப்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

மேற்கு ஆசியாவில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானுடன் ஒரு சுமுகமான ஒப்பந்தத்தை எட்ட அமெரிக்கா முன்னுரிமை அளித்து வருவதாக டிரம்ப் கூறினார். இந்த வார இறுதிக்குள் புதிய உடன்படிக்கை ஏற்பட வாய்ப்புள்ளதால், தற்போதைய போர் நிறுத்த காலக்கெடுவை நீட்டிக்கத் தேவையில்லை என்று அவர் நம்புகிறார். ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கக் கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாகவும், ஒருவேளை ஈரான் இந்த ஒப்பந்தத்திற்கு இணங்காவிட்டால் மீண்டும் முழுவீச்சில் போர் தொடங்கும் என்றும் டிரம்ப் தனது பேட்டியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version