ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மோஜ்தபா கமேனி (Mojtaba Khamenei), வான்வழித் தாக்குதலில் படுகாயமடைந்து கோமா நிலையில் இருப்பதாக வெளியாகி வரும் தகவல்கள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பிப்ரவரி 28 அன்று ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட அதே தாக்குதலில் மோஜ்தபாவும் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் அவர் தனது ஒரு காலை இழந்துள்ளதாகவும், வயிறு மற்றும் கல்லீரல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ‘தி சன்’ உள்ளிட்ட சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது 56 வயதாகும் மோஜ்தபா கமேனி, தெஹ்ரானில் உள்ள சினா பல்கலைக்கழக மருத்துவமனையில் (Sina University Hospital) தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் உயிருக்குப் போராடி வருவதாகவும், இதன்காரணமாகவே அவர் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே, ஈரானிய அரசுத் தொலைக்காட்சி அவரது அறிக்கையை ஒளிபரப்பினாலும், அது ஒரு செய்தி வாசிப்பாளர் மூலமே வாசிக்கப்பட்டது, மோஜ்தபா நேரில் தோன்றிப் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இந்தத் தகவல்களை ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது. ஈரான் அதிபரின் மகன் யூசுப் பெசெஷ்கியன் (Yousef Pezeshkian) கூறுகையில், மோஜ்தபா கமேனி நலமுடனும் பாதுகாப்புடனும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இது குறித்துக் கருத்து தெரிவிக்கையில், “அவர் காயமடைந்திருக்கலாம், ஆனால் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்” என்று கூறியுள்ளார். ஈரானின் புதிய தலைமை குறித்த இந்த மர்மம் மற்றும் போர்ச் சூழல் உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை நீடிக்கச் செய்துள்ளது.
