அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் பதற்றம், மத்திய கிழக்கு அரசியல் சூழ்நிலையை மட்டுமல்ல, உலகளாவிய எண்ணெய் சந்தையையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா முன்னெடுத்துள்ள கடற்படை தடைகள் காரணமாக, ஈரான் தற்போது கடுமையான ’எண்ணெய் ஏற்றுமதி மற்றும் சேமிப்பு நெருக்கடியை’ எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலை நீடித்தால், ஈரான் தனது எண்ணெய் உற்பத்தியை குறைக்கவோ அல்லது சில எண்ணெய் கிணறுகளை மூடவோ வேண்டிய நிலைக்கு செல்லக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஆனால் இந்த பிரச்சினை ஈரான் மட்டும் எதிர்கொள்ளும் பொருளாதார சிக்கலாக இல்லாமல், ’இந்தியா போன்ற எண்ணெய் இறக்குமதி நாடுகளுக்கும்’ புதிய சவால்களை உருவாக்கக்கூடியதாக மாறியுள்ளது.
ஆராய்ச்சி நிறுவனம் Kpler வெளியிட்டுள்ள தகவல்களின் படி, ஈரானுக்கு தற்போது 12 முதல் 22 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படாத எண்ணெய் சேமிப்பு திறன் மீதமுள்ளது. ஏற்றுமதி தடைகள் காரணமாக, ஈரானின் எண்ணெய் களங்களில் உற்பத்தியாகும் எண்ணெய் வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாமல் உள்ளூர் சேமிப்பு தொட்டிகளிலும் கடலில் நிறுத்தப்பட்டுள்ள டாங்கர்களிலும் சேமிக்கப்படுகிறது. ஆனால் இந்த சேமிப்பு வசதிகளும் விரைவாக நிரம்பி வருகின்றன.
ஹோர்முஸ் நீரிணை அருகே அமெரிக்க கடற்படை நடவடிக்கைகள் அதிகரித்ததன் பின்னர், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி கணிசமாகக் குறைந்துள்ளது. ஏப்ரல் மாதத்தின் முதல் வாரங்களில் தினசரி சுமார் 2.1 மில்லியன் பேரல்கள் அளவுக்கு இருந்த ஏற்றுமதி, கடற்படை தடைக்குப் பிறகு 567,000 பேரல்கள் அளவுக்கு மட்டுமே குறைந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது கிட்டத்தட்ட 70 சதவீதம் வீழ்ச்சி என்பதைக் காட்டுகிறது.
ஏற்றுமதி குறைந்ததால், ஈரான் தனது தினசரி எண்ணெய் உற்பத்தியையும் குறைக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சில மதிப்பீடுகளின் படி, தினசரி 2.5 மில்லியன் பேரல்கள் வரை உற்பத்தி குறைக்கப்பட்டிருக்கலாம். இந்த நிலை தொடர்ந்தால், ஈரானின் உற்பத்தி மேலும் குறைந்து 1.2 முதல் 1.3 மில்லியன் பேரல்கள் அளவுக்கு மட்டுமே இருக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இங்கே ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது:
ஈரானின் எண்ணெய் நெருக்கடி இந்தியாவை எப்படி பாதிக்கும்?
இந்தியா உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதி நாடுகளில் ஒன்றாகும். இந்தியாவின் மொத்த எரிசக்தி தேவையின் பெரும்பகுதி இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது தான் சார்ந்துள்ளது. மத்திய கிழக்கு பகுதி இந்தியாவுக்கு முக்கியமான எண்ணெய் வழங்குநர்களில் ஒன்றாக இருப்பதால், அங்கு ஏற்படும் எந்த அரசியல் பதற்றமும் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை நேரடியாக பாதிக்கக்கூடும்.ஈரானுடன் இந்தியாவின் எண்ணெய் வர்த்தகம் கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்க தடைகள் காரணமாக குறைந்திருந்தாலும், அந்த நாடு இன்னும் மத்திய கிழக்கு எண்ணெய் சந்தையின் ஒரு முக்கிய அங்கமாகவே உள்ளது. ஈரானின் உற்பத்தி குறைந்தால் உலக சந்தையில் கிடைக்கும் மொத்த எண்ணெய் அளவு குறையும். இதனால் உலக சந்தை விலைகள் உயர வாய்ப்பு உள்ளது.
எண்ணெய் விலை உயர்வு இந்திய பொருளாதாரத்திற்கு பல வழிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். முதலில், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரிக்கும். இது நாட்டின் வர்த்தக பற்றாக்குறையை அதிகரிக்கக்கூடும். இரண்டாவது, எரிபொருள் விலை உயர்வால் போக்குவரத்து செலவுகள் அதிகரிக்கும். அதன் விளைவாக உணவு உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர வாய்ப்பு உள்ளது.மேலும் ஹோர்முஸ் நீரிணை வழியாகவே உலகளவில் ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெயின் முக்கியமான பகுதி கடந்து செல்கிறது. இந்த பாதை பாதிக்கப்பட்டால், அது ஈரான் மட்டுமல்லாமல் சவுதி அரேபியா, ஈராக், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளின் ஏற்றுமதியையும் பாதிக்கக்கூடும். அப்படி நடந்தால் உலக எண்ணெய் சந்தையில் பெரிய அளவிலான விநியோக குறைவு உருவாகும்.
இந்த சூழ்நிலை இந்தியாவுக்கு இரட்டை சவாலாக மாறக்கூடும். ஒருபுறம் எண்ணெய் விலை உயர்வு, மறுபுறம் உலகளாவிய விநியோகத்தில் ஏற்படும் குழப்பம்.இத்தகைய நிலைகளை சமாளிக்க இந்தியா கடந்த சில ஆண்டுகளில் பல மாற்று முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஆப்பிரிக்கா போன்ற பல பகுதிகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதன் மூலம் விநியோக ஆதாரங்களை பல்வேறு நாடுகளாகப் பரப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேசமயம், நாட்டில் மூல எண்ணெய் காப்பகங்களை (Strategic Petroleum Reserves) உருவாக்கி அவசர சூழ்நிலைகளில் பயன்படுத்தும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், மத்திய கிழக்கு பகுதியில் நீடிக்கும் அரசியல் பதற்றம் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகளை எழுப்புகிறது.ஈரானின் எண்ணெய் சேமிப்பு திறன் இன்னும் சில வாரங்களில் முழுமையாக நிரம்பிவிட்டால், அந்த நாடு தனது எண்ணெய் கிணறுகளை மூட வேண்டிய நிலைக்கு செல்லக்கூடும். எண்ணெய் கிணறுகளை ஒருமுறை மூடிய பிறகு அவற்றை மீண்டும் முழுமையாக செயல்படுத்துவது சுலபமான செயலாக இருக்காது. இதனால் ஈரானின் நீண்டகால உற்பத்தி திறனும் பாதிக்கப்படலாம்.
அதனால், தற்போது நடைபெறும் இந்த நெருக்கடி வெறும் ஒரு பிராந்திய அரசியல் பிரச்சினையாக மட்டும் பார்க்கப்பட முடியாது. இது உலக எண்ணெய் சந்தையின் நிலைத்தன்மையையும், இந்தியா போன்ற பெரிய இறக்குமதி நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடிய ஒரு முக்கியமான திருப்புமுனையாக மாறக்கூடும்.
