ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதற்கு காரணமான ஈரானின் கடற்படை தளபதி அலிரேசா டாங்சிரி இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டார். பந்தர் அப்பாஸ் (Bandar Abbas) பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையின் (IRGC) கடற்படைத் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து The Jerusalem Post இதழுக்குத் தகவல் அளித்த இஸ்ரேலிய அதிகாரி ஒருவர், தாங்சிரி கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி மூடுவதற்கு முழுப் பொறுப்பாக இருந்தவர் அலிரேசா டாங்சிரி என The Times of Israel ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஜலசந்தி வழியாகத்தான் உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் செல்வது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரம், பாரசீக வளைகுடாவையும் உலகளாவிய கப்பல் போக்குவரத்து வழிகளையும் இணைக்கும் மிக முக்கியமான ஹார்முஸ் நீர்சந்தியின் ஓரத்தில் அமைந்துள்ளது. ராணுவ ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் இந்த இடம் உலகின் மிக முக்கியமான நெருக்கடியான கடல்வழிப் பாதையாகக் கருதப்படுகிறது.
அலிரேசா டாங்சிரி, இஸ்ரேல் அல்லது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டாரா அல்லது என்ன சூழ்நிலையில் கொல்லப்பட்டார் என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை. ஈரானிடமிருந்து உடனடியாக எந்த உறுதிப்படுத்தலும் வரவில்லை, மேலும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் இந்தத் தாக்குதல் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
ஈரானின் கடல்சார் செயல்பாடுகளில் IRGC கடற்படை வகிக்கும் மையமான பங்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் (Gulf Region) அதன் மூலோபாய ரீதியான வலுவான நிலைப்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, அலிரேசா டாங்சிரியின் மரணம் ஈரானுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 28 அன்று தொடங்கிய அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலுக்குப் பிறகு, ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள் வரிசையாகக் கொல்லப்பட்டு வரும் நிலையில், அலிரேசா டாங்சிரியின் மரணம் ஈரான் கடற்படைக்கு விழுந்த மிகப்பெரிய அடியாகப் பார்க்கப்படுகிறது.
அலிரேசா டங்ஸிரி யார்? பூஷேர் மாகாணத்தில் பிறந்த அலிரேசா டாங்சிரி, ஈரான்-ஈராக் போர் மற்றும் 1980-களில் ஈரானுடன் அமெரிக்கா மேற்கொண்ட முதல் நேரடி மோதலைக் குறிக்கும் வகையில் அமைந்த, ‘டேங்கர் போர்கள்’ (Tanker Wars) என்று அழைக்கப்பட்ட மோதல்களின் போது பணியாற்றியதன் மூலம், இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) கடற்படை வரிசையில் படிப்படியாக உயர்ந்து வந்தார்.
பின்னர், அவர் பந்தர் அப்பாஸில் அமைந்துள்ள IRGC கடற்படையின் 1-வது கடற்படை மாவட்டத்திற்குத் தளபதியாகப் பொறுப்பு வகித்ததுடன், 2010 முதல் 2018 வரை துணைத் தளபதியாகவும் பணியாற்றினார்; ஆகஸ்ட் 2018-இல், அப்படையின் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றார்.
சமீப வாரங்களாக, வளைகுடாப் பகுதியில் குறிப்பாக ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரானின் செயல்பாடுகள் தொடர்பாக, டங்ஸிரி மிகவும் ஆக்ரோஷமான நிலைப்பாட்டை மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம், அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது பதிலடி தாக்குதல் நடத்தப்போவதாக அவர் எச்சரித்ததுடன், பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் அத்தளங்களை விட்டு விலகியிருக்குமாறும் அறிவுறுத்தினார். “எங்களின் இலக்குகள் பட்டியல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் தொடர்புடைய எண்ணெய் நிலையங்கள் தற்போது அமெரிக்க ராணுவத் தளங்களுக்கு இணையானவையாகக் கருதப்படுகின்றன; அவை முழு வீச்சுடன் கூடிய தாக்குதலுக்கு உள்ளாகும்,” என்று அவர் கூறியிருந்தார்.
ஈரானின் கடற்படைத் திறன்களைச் செயலிழக்கச் செய்வதே தங்களின் முதன்மையான முன்னுரிமை என்று அமெரிக்கா பலமுறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மோதல் தொடங்கியதிலிருந்து, ஈரானிய கடற்படை மற்றும் IRGC-யுடன் தொடர்புடைய சுமார் 100 கப்பல்களை வாஷிங்டன் குறிவைத்து அழித்துள்ளதாகக் கருதப்படுகிறது.
