பொலிவியாவில் மத்திய வங்கியிலிருந்து புதிய பணத் தாள்களை ஏற்றிச்சென்றுகொண்டிருந்த அந்த விமானம், பொலிவியா தலைநகர் லா பாசுக்கு அருகே உள்ள ‘எல் அல்டோ’ நகரில், பரபரப்பான சாலை ஒன்றில் விபத்துக்குள்ளானது. விமான விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
விமானம் விழுந்து நொறுங்கியதில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 15-க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன. உயிரிழந்தவர்கள் விமானத்தில் பயணித்தவர்களா அல்லது அப்பகுதியில் இருந்தவர்களா என அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு கூட்டம் கூட்டமாக சென்ற அப்பகுதி மக்கள் கீழே சிதறிய பண நோட்டுகளை எடுத்துச் செல்வதில் முண்டியடித்துக் கொண்டனர். கண்ணீர் புகை குண்டுகளையும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போலீசார் அவர்களை கட்டுப்படுத்தினர். விபத்து காரணமாக எல் அல்டோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அந்நாட்டு தேசிய விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
