வளைகுடா பிராந்தியத்தில் போர் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் இடையேயான வார்த்தைப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சர்வதேச எண்ணெய் ஏற்றுமதியை ஈரான் தடுத்தால், அந்த நாட்டின் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் 20 மடங்கு கடுமையான தாக்குதலை நடத்துவோம் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். அமெரிக்காவின் இந்த மிரட்டல் உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
டிரம்பின் இந்த அதிரடி எச்சரிக்கைக்கு ஈரான் தரப்பிலிருந்து தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் அலி லாரிஜானி இது குறித்துப் பேசுகையில், “டிரம்பை விடவும் அதிக அதிகாரமும் வலிமையும் கொண்டவர்களாலேயே ஈரானை ஒன்றும் செய்ய முடியவில்லை. கடந்த கால வரலாறுகளை டிரம்ப் சற்றுத் திரும்பிப் பார்க்க வேண்டும்” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் இறையாண்மைக்கு எதிராகச் செயல்பட்டால் அமெரிக்கா தகுந்த விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து எச்சரித்த அலி லாரிஜானி, “டிரம்ப் தனது வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும்; இல்லையெனில் அவர் காணாமல் போக நேரிடும்” என்று மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஈரானின் இந்த ஆக்ரோஷமான பதில், வளைகுடா பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டால், அது உலகப் பொருளாதாரத்திலும், குறிப்பாக எண்ணெய் விநியோகத்திலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனப் சர்வதேச அரசியல் வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
