இந்தியா மீதான வரிகளை அமெரிக்கா 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைத்துள்ளது. பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய சிறிது நேரத்திலேயே டொனால்ட் டிரம்ப் இதை அறிவித்தார். இந்த வரி குறைப்பு ஜூலை 31, 2025 முதல் அமலுக்கு வந்ததாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்து ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டார். அதில், பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டியதுடன், இந்தியா இனி ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்காது என்றும் கூறினார். இந்தியா இனி அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து அதிக எண்ணெய் வாங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் டிரம்ப் தெரிவித்தது, இந்திய பிரதமர் மோடியுடன் பேசுவதற்கு பெருமையாக இருந்தது. அவர் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவர்; தனது நாட்டில் சக்திவாய்ந்ததும், மதிப்புமிக்கதும் ஆன தலைவரும் ஆவார். வர்த்தகம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும், ரஷ்யா–உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் நாம் விவாதித்தோம். இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளது. அதே நேரத்தில், அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிலிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கவும் சம்மதித்துள்ளது. இது உக்ரைனில் தற்போது நடைபெற்று வரும் போரைக் முடிவுக்கு கொண்டு வர உதவும்; அந்தப் போர் ஒவ்வொரு வாரமும் உயிர்களை பறிக்கிறது.”
அவர் மேலும் கூறியதாவது: “பிரதமர் நரேந்திர மோடியின் மீதான நட்பு மற்றும் மரியாதை காரணமாகவும், அவரது கோரிக்கையின் பேரிலும், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம், இது உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்கா பரஸ்பர வரிகளை 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கும். இதேபோல், இந்தியாவும் அமெரிக்காவிற்கு எதிரான தனது வரி மற்றும் வரியல்லாத தடைகளை பூஜ்ஜியமாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கும்.”
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கூற்றுப்படி, ‘அமெரிக்கப் பொருட்களை வாங்குங்கள்’ கொள்கையின் கீழ், பிரதமர் மோடியும் அமெரிக்காவிலிருந்து பெருமளவிலான கொள்முதல்களை மேற்கொள்ள உறுதியளித்துள்ளார். இதில் 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள அமெரிக்க எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பிற பொருட்கள் அடங்கும். இந்தியா-அமெரிக்க உறவுகள் எதிர்காலத்தில் மேலும் வலுப்பெறும் என்றும், இரு தலைவர்களும் தாங்கள் சொன்னதைச் செய்து முடிக்கும் தலைவர்கள் என்றும் டிரம்ப் கூறினார்.
டொனால்ட் டிரம்ப் வரிக் குறைப்புகளை அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோரும் இதுகுறித்து கருத்து தெரிவித்தார். அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது: “நான் பலமுறை கூறியது போல, அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியை ஒரு உண்மையான நண்பராகக் கருதுகிறார்! இன்று மாலை வர்த்தக ஒப்பந்தம் குறித்த செய்தியால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளின் சாத்தியக்கூறுகள் எல்லையற்றவை!”
மெரிக்க அதிபர், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரியை விதித்தார். பின்னர், ரஷ்ய எண்ணெய்க் கொள்முதல் தொடர்பாக இந்த வரி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யாவிற்கு இந்தியா உதவுவதால், இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கக்கூடாது என்று டிரம்ப் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
