ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து நடத்தி வரும் வான்வழித் தாக்குதல் இன்று 11-வது நாளை எட்டியுள்ளது. கடந்த பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்த “ஆபரேஷன் ரோரிங் லயன்” (Operation Roaring Lion) நடவடிக்கையில், இதுவரை தளபதிகள் உட்பட 1,900-க்கும் மேற்பட்ட ஈரான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின் (Effie Defrin) தெரிவித்துள்ளார்.  ஈரானின் ஏவுகணை தளங்கள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் முக்கிய ராணுவக் கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் வீசப்பட்டதில் அந்நாட்டின் ராணுவ பலம் பெருமளவில் சிதைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்படுகிறது.

டெஹ்ரான், இஸ்பஹான் மற்றும் தெற்கு ஈரான் பகுதிகளில் உள்ள ராணுவ விமான நிலையங்கள், ஏவுகணைத் தளங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தீவிரமான தாக்குதலில் இந்த இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, ஈரானின் ‘குத்ஸ் படை’ (Quds Force) பயன்படுத்திய 16 சரக்கு விமானங்களை இஸ்ரேல் அழித்துள்ளதாகவும், இவை பிராந்தியத்தில் உள்ள தனது ஆதரவு அமைப்புகளுக்கு ஆயுதங்களைக் கடத்தப் பயன்படுத்தப்பட்டவை என்றும் இஸ்ரேல் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில், இதுவரை 12 இஸ்ரேலிய பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் தாக்குதலில் காயமடைந்த சுமார் 2,238 பேர் இஸ்ரேல் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகள் மீதும் இஸ்ரேல் 700-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய போர்ச் சூழலில், ஈரானின் புதிய உச்சபட்சத் தலைவரைக் குறிவைக்கவும் தாங்கள் தயங்கப்போவதில்லை என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்தப் போரினால், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஈரான் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான உயிரிழப்புப் புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், இஸ்ரேலின் அறிவிப்பு போரின் தீவிரத்தை உணர்த்துகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தப் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள போதிலும், இரு தரப்பும் பின்வாங்காத நிலையில் மத்திய கிழக்கு நாடுகள் போர் சூழலின் பிடியில் சிக்கியுள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version