ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரானியத் தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக ஈரான் ஹார்முஸ் நீரிணையை  மூடியது. உலகின் 20% கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து இந்த வழியாகவே நடைபெறுவதால், தற்போது இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு 48 மணி நேரக் கெடு விதித்து அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். “ஈரான் 48 மணி நேரத்திற்குள் ஹார்முஸ் நீரிணையை முழுமையாகத் திறக்காவிட்டால், அந்நாட்டின் மின்சக்தி நிலையங்கள் (Power Plants) மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவை தரைமட்டமாக்கப்படும்; குறிப்பாக மிகப்பெரிய மின்நிலையத்திலிருந்து இந்தத் தாக்குதல் தொடங்கும்” என டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டிரம்ப்பின் இந்த எச்சரிக்கைக்கு ஈரான் ராணுவம் உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ளது. ஒருவேளை அமெரிக்கா ஈரானின் எரிசக்தி அல்லது மின்சாரம் சார்ந்த கட்டமைப்புகளைத் தாக்கினால், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் தகவல் தொழில்நுட்பம், கடல்நீர் சுத்திகரிப்பு மற்றும் எரிசக்தி நிலையங்கள் அனைத்தும் இலக்காக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. “ஹார்முஸ் நீரிணையைத் திறக்கப் போவதில்லை” என்பதில் ஈரான் பிடிவாதமாக இருப்பதால், மத்திய கிழக்கில் எந்த நேரத்திலும் ஒரு முழு அளவிலான போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version