மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றத்தின் ஒரு பகுதியாக, இலங்கை கடற்பரப்புக்கு அருகே சென்று கொண்டிருந்த ஈரானிய போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இலங்கையின் தெற்கு கடற்கரைப் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் கப்பலில் இருந்த 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 180 பேருடன் பயணித்த ‘ஐரிஸ் தேனா’ (Iris Dena) என்ற அந்தப் போர்க்கப்பல், சர்வதேச கடல் பகுதியில் தற்காப்பு நிலையில் இருந்தபோது அமெரிக்காவால் குறிவைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு எதிரி நாட்டுக் கப்பலை டார்பிடோ (Torpedo) ஏவுகணை மூலம் நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி அழிப்பது இதுவே முதல் முறை என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் நடந்த இந்தத் தாக்குதலின் வீடியோ காட்சிகளையும் அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது.
https://x.com/ANI/status/2029205577847730543?
சம்பவம் நடந்த இடத்திலிருந்து இதுவரை 87 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. மேலும், 32 ஈரானிய குடிமக்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மாயமானவர்களைத் தேடும் பணியில் இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த போர்க்கப்பல் அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச கடற்படை பயிற்சியில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதல் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
