ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு படைகள் இடையே கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இப்போரின் எதிரொலியாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடக்கியுள்ளது.
இதற்கிடையே ஈரான் – அமெரிக்கா இரு தரப்பிலும் 2 வாரங்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு அமைதி பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. பாகிஸ்தானை மத்தியஸ்தராக கொண்டு நடைபெறும் இந்த அமைதி பேச்சு வார்த்தையில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான குழுவும், ஈரான் தரப்பில் அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிப் தலைமையிலான குழுவும் இஸ்லாமாபாத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இதற்காக, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ், சனிக்கிழமை இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்தார். இச்சந்திப்பின் போது அமெரிக்கா தரப்பில் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் பாகிஸ்தான் தரப்பில் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது இஷாக் டார் மற்றும் உள்துறை அமைச்சர் சையத் மொஹ்சின் ரஸா நக்வி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. ஈரானின் அதிகாரிகள், அமெரிக்க குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பு, பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின்னர் நடந்த நீண்ட பேச்சுவார்த்தை ஏறக்குறைய 15 மணிநேரம் நீடித்தது. இன்று அதிகாலை 3.40 மணி வரை பேச்சுவார்த்தை தொடர்ந்தது. இந்த பேச்சுவார்த்தையின்போது, இரு தரப்பு குழுவினரும் எழுத்து வடிவிலான ஆவணங்களை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டனர். எனினும், இதுதொடர்பான எந்த விவரங்களும் ஊடகங்களுக்கு பகிரப்படவில்லை. இதனால், இன்று 2-வது நாளாக பேச்சுவார்த்தை தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என வான்ஸ் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய வான்ஸ், எங்களையும், ஈரானியர்களையும் இணைக்கும் வகையில், ஓர் ஒப்பந்தம் ஏற்படும் வகையிலான உதவிடும் பணியை மேற்கொண்டு, பாகிஸ்தான் ஆச்சரியம் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இரு தரப்பு குழுவினரும் 21 மணிநேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். ஈரானியர்களுடன் பெரிய அளவிலான விவாதங்களை மேற்கொண்டோம். அது நல்ல செய்தி.
ஆனால், ஒப்பந்தம் எதுவும் ஏற்படாதது கெட்ட செய்தி. அமெரிக்காவுக்கான கெட்ட செய்தி என்பதனை விட, ஈரானுக்கான கெட்ட செய்தியாகவே உள்ளது. அதனால், ஒப்பந்தம் எதுவும் ஏற்படாமலேயே நாங்கள் அமெரிக்காவுக்கு திரும்பி செல்கிறோம். எங்களுடைய நிபந்தனைகளை ஏற்க கூடாது என அவர்கள் முடிவு செய்து இருக்கின்றனர்.
ஈரானியர்கள் அணு ஆயுதம் உபயோகிக்க கூடாது என்றும், எளிதில் அணு ஆயுதம் உற்பத்தி செய்வதற்கான உபகரணங்களை வைத்திருக்க கூடாது என்பதே அமெரிக்க ஜனாதிபதியின் முக்கிய இலக்காகும். அதனையே அவர்களிடம் நாங்கள் எதிர்பார்த்தோம். அதனை உறுதி செய்வார்கள் என்பதே எங்களுடைய தேவையாக இருந்தது.
அவர்களுடைய அணு சக்தியின் செறிவூட்டப்பட்ட மையங்கள் அழிக்கப்பட்டு விட்டன. ஆனால், இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அல்லது நீண்ட காலத்திற்கு ஈரானியர்கள் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடாமல் இருப்பார்களா? என்பதே தற்போதுள்ள கேள்வி. அதனை நாங்கள் பார்க்கவில்லை. விரைவில் அது சாத்தியப்படும் என நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.
முன்னதாக, அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் சிறந்த ஆயுதங்கள் காத்திருக்கின்றன என்று டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், இப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்றும் பதிலடியாக ஈரானும் ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், உலக நாடுகள் மீண்டும் கலக்கமடைந்துள்ளன.
