சராசரியாக ஒரு நபர் உடலில் நீரேற்றத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு ஒவ்வொரு நாளும் 3.7 லிட்டர் அல்லது 125 அவுன்ஸ் தண்ணீர் தேவைப்படுகிறது. குளிர்காலத்தில் கோடை காலத்தை போல் அடிக்கடி தாகம் எடுக்காததால், நம்மை அறியாமலேயே நீர் பருகும் அளவு குறைந்து போய்விடும். குளிர்காலத்தில் குளிர்ச்சி நிலவுவதால் உடலுக்கு உடலுக்கு குறைந்த அளவிலேயே திரவம் தேவைப்படும் என்று அர்த்தமல்ல.
குளிர்காலத்தில் வியர்வை குறைவாக சுரக்கும். நம்மைச் சுற்றியுள்ள காற்றும் உலர்ந்து போய்விடும். அதனால் சிறுநீர் மூலம் திரவ இழப்பு அதிகரிப்பதால் உடல் அதிக ஈரப்பதத்தை இழக்கும். அதனை ஈடு செய்வதற்கு நீர்ச்சத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆதலால் குளிர் காலத்தில் தண்ணீர் உட்கொள்வதை குறைக்காதீர்கள். வெப்பநிலை குறைவாக இருக்கும்போதும் நீரிழப்பு ஏற்படலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
தண்ணீர் குடிப்பதை குறைத்தால், வெளியேற வேண்டிய கழிவுகள் சிறுநீரகத்திலேயே தேங்கிவிடும். ஆற்றில் தண்ணீர் வறண்டு போனால் மணல் திட்டுக்கள் உருவாகுவது போல, தண்ணீர் குறைந்தால் இந்த உப்புகள் ஒன்றாக சேர்ந்து கடினமான கற்களாக மாறிவிடுகின்றன. இதுவே பின்னாளில் கடும் வலியை ஏற்படுத்துகிறது.
சிறுநீரகக் கல் ஆரம்பத்தில் பெரிதாக அறிகுறிகளை காட்டாது. ஆனால் கல் நகரும் போது கடுமையான வலி ஏற்படும். இடுப்புக்கு மேலே, விலா எலும்புக்குக் கீழே திடீரென தீவிரமான வலி தோன்றி, அது முன்பக்கம் அடிவயிறு வரை பரவலாம்.
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் அல்லது வலி இருக்கும். சில நேரங்களில் சிறுநீர் இளஞ்சிவப்பு நிறமாகவோ அல்லது நுரை தள்ளியவாறோ வெளியேறலாம். தொடர்ச்சியான முதுகு வலியுடன் குமட்டல் அல்லது வாந்தி உணர்வு ஏற்படலாம். இந்த அறிகுறிகள் தோன்றினால், உடனே மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம்.
