கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான அரவண பாயாசம் பலரது ஃபேவைரைட். பள்ளி படிக்கும் போது, மாணவர்கள் அல்லது குடும்பத்தில் ஒருவர் சபரி மலைக்கு சென்று வந்தால், அரவண பாயாசத்தை அனைவருக்கும் கொஞ்சம் கொடுப்பார்கள். அதனை சாப்பிட்டதும் இன்னும் கொஞ்சம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என தோன்றும். இப்படி தான் பலருக்கு அரவண பாயாசம் அறிமுகமாகியிருக்கும்.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கி 41 நாட்களுக்கு பின் சபரிமலைக்கு சென்று வருவார்கள். வரும்போது கட்டாயம் அரவண பாயாசம் வாங்கி வருவார்கள். அப்படி, அனைவருக்கும் பிடித்தமான மற்றும் ஐயப்ப சுவாமிக்கு உகந்த அரவண பாயாசத்தை பக்குவமாய் வீட்டில் கூட செய்யலாம். கீழ் கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை பின்பற்றி, ஒரு முறை இந்த பிரசாதத்தை செய்து பார்த்து கார்த்திகை மாதத்தில் ஐயப்ப சுவாமிக்கு நைவேத்தியமாக படையுங்கள்.
அரவண பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:
- கேரளா மட்டை அரிசி (சிவப்பு அரிசி) – 200 கிராம்
- வெல்லம் – 400 கிராம்
- தேங்காய் துண்டுகள் – 1 கப்
- சுக்கு தூள் – 2 டீஸ்பூன்
- முந்திரி பருப்பு – 100 கிராம்
- தண்ணீர் – தேவையான அளவு
- நெய் – தேவையான அளவு
அரவண பாயாசம் செய்வது எப்படி?
- அரவண பாயாசம் செய்வதற்கு முதலில் வெல்லத்தை கரைத்து கொள்ளலாம். அதற்கு, ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி பொடித்த வெல்லம் சேர்த்து கரைக்கவும். வெல்லம் நன்கு கலந்து வந்ததும், அடுப்பை அணைத்து தனியாக வைக்கவும்.
- இப்போது ஒரு அடிக்கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் தேங்காய் துண்டுகளை சேர்த்து வறுக்கவும். தேங்காய் பொன்னிறமாக வறுப்பட்டு வந்ததும் தனியாக மாற்றி வைக்கவும்.
- இப்போது அதே பாத்திரத்தில் மீண்டும் நெய் விட்டு, முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.
- இப்போது அரிசியை நன்கு கழுவி பாத்திரத்தில் சேர்த்து ஒன்னுக்கு ஐந்து அல்லது ஆறு பங்கு (ஒன்றரை லிட்டர்) எனும் கணக்கில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- தண்ணீர் நன்கு கொதித்து வந்ததும், ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கலந்து மூடி போட்டு அரிசியை வேக விடவும். சாதம் வெந்து வந்ததும், கரைத்து வைத்த வெல்லத்தை வடிகட்டி சேர்க்கவும்.
- இப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து அரிசியை நன்கு கலந்து விடவும். கூடவே சுக்கு பொடி சேர்த்து கலந்து விடவும்.
- பின்னர், மீண்டும் மூன்று டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து கொள்ளவும். பாயாசம் கொதித்து கட்டியாகி வந்ததும் அடுப்பை அணைக்கவும். இப்போது வறுத்த தேங்காய் துண்டுகள் மற்றும் முந்திரியை சேர்த்து கலந்து மூடி விடவும். .
- 10 நிமிடங்களுக்கு பின்னர், பாத்திரைத்தை திறந்தால் அரவண பாயாசம் தயார்.
டிப்ஸ்:
- கேரளா மட்டை அரிசி இல்லை என்பவர்கள் வேறு அரிசி வகைகளிலும் செய்யலாம். பாஸ்மதி அரிசியில் மட்டும் செய்யக்கூடாது.
- அரிசியை குக்கரில் வேக வைத்தால் குழைந்து போக வாய்ப்புள்ளது. அதனால், பாத்திரத்தில் வேக வைக்கவும்.
- அரவண பாயாசத்தில் பால் மற்றும் பருப்பு பொருட்கள் சேர்க்காததால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
