மிழ்நாட்டில் தேர்தல் என்றாலே பொதுவாக அதிக வாக்காளர் பங்கேற்பு காணப்படும். கடந்த பல தேர்தல்களிலும் மாநில அளவில் வாக்குப்பதிவு 70 சதவீதத்தைத் தாண்டுவது வழக்கம். ஆனால் இந்தச் சராசரியில் இருந்து நீண்ட காலமாக விலகி நின்ற ஒரு நகரம் இருக்கிறது — அது சென்னை. மாநிலத்தின் அரசியல் மையமாகவும் நிர்வாக தலைநகரமாகவும் இருக்கும் சென்னை, தேர்தல் நாளில் வாக்காளர்களை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு வருவதில் தொடர்ந்து பின்னடைந்த நகரமாகவே விமர்சிக்கப்பட்டு வந்துள்ளது.ஆனால் இந்த முறை நடைபெறும் சட்டசபை தேர்தலில் சென்னையின் 16 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மாலை 5 மணி அளவில் சராசரியாக 80 சதவீதத்தை தாண்டி உள்ளதாக வெளியாகி உள்ள தகவலை பார்க்கும்போது, ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது: சென்னை வாக்காளர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டதா?

நீண்ட கால விமர்சனம்

சென்னையில் குறைந்த வாக்குப்பதிவு என்பது புதிய விவாதமல்ல. கடந்த இருபது ஆண்டுகளாகவே இது தேர்தல் ஆய்வாளர்களின் முக்கியமான கவலையாக இருந்து வருகிறது. மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு அதிகமாக இருந்தாலும், சென்னையில் அது கணிசமாகக் குறைவாக இருப்பது பல முறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உதாரணமாக, 2024 நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை, சென்னை தெற்கு, சென்னை வடக்கு ஆகிய மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளின் சராசரி வாக்குப்பதிவு 55.94% மட்டுமே இருந்தது. இதில் மத்திய சென்னை வாக்குப்பதிவு மாநில சராசரியான 69.72% ஐ விட மிகவும் குறைவாக இருந்தது. இதே போக்கு 2021 சட்டமன்றத் தேர்தலிலும் காணப்பட்டது. அப்போது சென்னை மாவட்டத்தில் சராசரி வாக்குப்பதிவு சுமார் 59% அளவில் இருந்தது. அதே நேரத்தில் மாநில அளவில் அது 73.63% ஆக இருந்தது. வேளச்சேரி, மயிலாப்பூர் போன்ற நகர்ப்புற பகுதிகளில் கூட 55–57 சதவீதம் மட்டுமே வாக்குகள் பதிவானது.இதற்கும் முன்பு 2016 சட்டமன்றத் தேர்தலிலும் சென்னையில் சுமார் 60–61% அளவிலேயே வாக்குப்பதிவு இருந்தது. இந்தத் தரவுகள் ஒரு விஷயத்தை தெளிவாகச் சொல்கின்றன: தமிழ்நாட்டில் மிகக் குறைந்த வாக்குப்பதிவு கொண்ட நகரம் என்ற அடையாளம் நீண்ட காலமாக சென்னையையே தொடர்ந்து வந்துள்ளது.

நகர்ப்புற அலட்சியம்

இந்த நிலைமையை அரசியல் ஆய்வாளர்கள் பல்வேறு காரணங்களுடன் விளக்க முயற்சித்துள்ளனர். பொதுவாக நகர்ப்புறங்களில் வாக்காளர் பங்கேற்பு குறைவாக இருப்பது உலகின் பல ஜனநாயகங்களிலும் காணப்படும் ஒரு போக்காகும்.சென்னையிலும் அதே நிலைமையே காணப்படுகிறது. தேர்தல் நாளில் நகர்ப்புற மக்கள் வெளியூர் பயணம் செல்வது, வேலைச்சுமை காரணமாக வாக்களிக்க நேரமில்லாமல் போவது, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதது போன்ற பிரச்சினைகள் அடிக்கடி சுட்டிக்காட்டப்படுகின்றன. கூடுதலாக, கடும் வெப்பம் போன்ற காரணங்களும் நகரங்களில் வாக்குப்பதிவு குறைவுக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் கிராமப்புறங்களில் தேர்தல் ஒரு சமூக நிகழ்வாக மாறிவிடுகிறது. மக்கள் பெரும்பாலும் அதிக ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வருகிறார்கள். அதனால் தான் தர்மபுரி, கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் 75 முதல் 80 சதவீதத்துக்கும் மேல் வாக்குப்பதிவு பதிவாகும்.

கோவையுடன் ஒப்பிடும்போது

நகர்ப்புற வாக்குப்பதிவு குறைவாக இருப்பது சென்னைக்கு மட்டும் தனித்துவமான பிரச்சினை அல்ல. கோவை போன்ற மற்ற பெரிய நகரங்களிலும் அது மாநில சராசரியை விட குறைவாகவே இருக்கும்.உதாரணமாக 2024 நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியின் வாக்குப்பதிவு 64.89% ஆக இருந்தது. இது மாநில சராசரியான 69.72% ஐ விட குறைவாக இருந்தாலும், சென்னையின் 55.94% ஐ விட கணிசமாக அதிகமாகும்.2021 சட்டமன்றத் தேர்தலிலும் கோவை வடக்கு மற்றும் கோவை தெற்கு தொகுதிகளில் வாக்குப்பதிவு முறையே சுமார் 59.87% மற்றும் 61.22% ஆக இருந்தது. இதனால், நகர்ப்புறங்களில் வாக்குப்பதிவு குறைவாக இருப்பது ஒரு பொதுவான போக்காக இருந்தாலும், சென்னையில் அது மிகவும் தீவிரமாக இருந்தது என்பது தெரிகிறது.

இந்த முறை ஏன் மாற்றம்?

இந்த பின்னணியில் இந்த முறை சென்னையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மாலை 5 மணி அளவிலேயே 80 சதவீதத்தை தாண்டி உள்ளது. இந்த மாற்றத்திற்கான பல்வேறு காரணங்களில் முக்கியமான ஒன்றாக சமூக வலைதளங்களின் தாக்கமும் குறிப்பிடப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு குறித்து சமூக வலைதளங்களில் பல பிரச்சாரங்கள் நடந்துள்ளன. “Vote for Chennai”, “No Vote No Voice” போன்ற பிரச்சாரங்கள் நகர்ப்புற இளைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.இன்னொரு காரணமாக விழிப்புணர்வு இயக்கங்கள் இருக்கலாம். தேர்தல் ஆணையமும் பல்வேறு அமைப்புகளும் கடந்த சில ஆண்டுகளாக நகர்ப்புறங்களில் வாக்காளர் பங்கேற்பை அதிகரிக்க முயற்சி செய்து வருகின்றன. கல்லூரிகள், ஐடி நிறுவனங்கள், குடியிருப்பு சங்கங்கள் போன்ற இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

மூன்றாவது காரணம் அரசியல் போட்டியின் தீவிரம் ஆக இருக்கலாம். தேர்தல் கடுமையான போட்டியாக மாறும்போது, பொதுவாக வாக்காளர்கள் அதிகமாக வாக்களிக்க வருவார்கள். இந்த தேர்தலிலும் அதுபோன்ற அரசியல் சூழல் உருவாகியிருக்கலாம்.மேலும் வாக்களிப்பில் சினிமா நட்சத்திரங்கள் காட்டிய ஆர்வமான பங்களிப்பு குறித்த செய்திகள் தொலைக்காட்சிகளில் காட்டப்படுவது, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதும் வாக்காளர்களுக்கு ஊக்குவிப்பாக அமைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

நகர்ப்புற அரசியல் மாற்றமா?

இந்த எல்லா காரணிகளையும் பார்த்தால், இந்த முறை சென்னையில் அதிக வாக்குப்பதிவு ஒரு தற்காலிக நிகழ்வா அல்லது நீண்ட கால மாற்றத்தின் ஆரம்பமா என்பது தான் முக்கியமான கேள்வியாக இருக்கிறது. நகர்ப்புற வாக்காளர்கள் அரசியலில் அதிக ஈடுபாடு காட்டத் தொடங்கினால்,அது தமிழ்நாட்டின் தேர்தல் அரசியலிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். நகர்ப்புற வாக்காளர்களின் அரசியல் முன்னுரிமைகள் கிராமப்புறங்களிலிருந்து சில சமயங்களில் வேறுபடும். அதனால் வாக்குப்பதிவு அதிகரிப்பது தேர்தல் முடிவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.சென்னை நீண்ட காலமாக “குறைந்த வாக்குப்பதிவின் நகரம்” என்ற விமர்சனத்தைச் சந்தித்து வந்துள்ளது. ஆனால் இந்த முறை காணப்பட்ட விறுவிறுப்பான வாக்குப்பதிவு அந்தப் போக்கை மாற்றக்கூடிய ஒரு அறிகுறியாக இருக்கலாம்.

இந்த மாற்றம் உண்மையானதா அல்லது ஒரு தேர்தலுக்கான தற்காலிக நிகழ்வா என்பதை காலம் தான் தீர்மானிக்கும். ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதி —நகர்ப்புற வாக்காளர்கள் அதிகமாக வாக்களிக்கத் தொடங்குவது ஜனநாயகத்தின் வலிமையை மேலும் வலுவடையச் செய்யும்!

– பா. முகிலன்

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version