அதிமுகவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலையீடு இருக்காது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையனின் சர்ச்சையால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் டெல்லியில் அமித்ஷாவை எடப்பாடி சந்தித்து பேசியது கவனத்தை ஈர்த்தது.

இதையடுத்து தமிழ்நாட்டிற்கு மீண்டும் திரும்பிய எடப்பாடி பழனிசாமி சேலம் ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தது வெளிப்படையானது. அரசு காரில் சென்று தான் அவரை சந்தித்தேன். முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தோம். என் எழுச்சி பயணம் சிறப்பாக இருப்பதாக கூறி அமித்ஷா பாராட்டினார்.

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக நான் அமித்ஷாவிடம் பேசவில்லை. அதிமுக விவகாரத்தில் பாஜக தலையீடு இருக்காது. அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டேன் என்று அமித்ஷாவே கூறியுள்ளார். யார்கிட்டையும் முகத்தை மறைக்க வேண்டிய முகம் எனக்கு இல்லை. கூட்டணியை பொறுத்தவரை அதிமுகவில் நான், பாஜகவில் அமித்ஷா கூறுவது தான் இறுதி.

அதிமுகவில் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களிடம் தொடர்பு வைத்திருந்தால் நடவடிக்கை பாயும் என்பதே சிறப்பு தீர்மானம். அதன்படி செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. நான் முகமூடி அணிந்து சென்றதாக டிடிவி தினகரன் விமர்சித்தார். அவர் தான் முகமூடியுடன் கூட்டணிக்குள் வர முயற்சிக்கிறார்” என அதிரடியாக பேசியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version