இன்று சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய நிலையில் தொகுதி பங்கீட்டில் அதிமுகவை, பாஜக நிர்பந்திக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, விஜய், மற்றும் நாதக கூட்டணியில் 4முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மாநாட்டு போட்டு பிரச்சாரத்தை தொடங்கியுள்ள பிரதான கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையிலும் தீவிரம் காட்டி வருகின்றன.
அந்த வகையில் கடந்த 2021 தேர்தல் போல இந்த முறையும் அதிமுக – பாஜக கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முக்கியமாக கடந்த முறை 20 இடங்களில் போட்டியிட்டு வெறும் 4 தொகுதிகளில் மட்டும் வெற்றிப்பெற்ற பாஜக, இம்முறை அதிகமான சீட் கேட்பதாக சொல்லப்படுகிறது.
இதற்கேற்றார்போல் இன்று சென்னை பசுமை வழி சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்ற நயினார் நாகேந்திரன் அவரை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பாஜக சார்பில் இம்முறை சுமார் 56 சீட்டுகள் அதுவும் அதிமுகவுக்கு பலம் வாய்ந்த மேற்கு மண்டலம், தென் சென்னை, கோவையின் முக்கிய தொகுதிகளை குறி வைத்து கேட்பதாக சொல்லப்படுகிறது.
எனினும், சந்திப்பு முடிந்து வெளியே வந்த நயினார் நாகேந்திரன், பிரதமர் மோடி இம்மாத இறுதியில் தமிழகம் வருவதால் அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், தொகுதி பங்கீடு சுமூகமான முறையில் பேசப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
