அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக போர்வாள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: அதிமுகவில் நீண்டகாலமாக நிலவும் உள்ளடி பிளவு மற்றும் அதிகாரப் போட்டியின் பின்னணியில், கட்சியின் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் புதிய அதிகாரப்பூர்வ நாளிதழ் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘போர்வாள்’ எனப் பெயரிடப்பட்ட இந்த தமிழ் நாளிதழ், இபிஎஸ் தரப்புக்கு முக்கியமான ஊடகத் தளமாக உருவெடுத்துள்ளது.
இன்று அதிமுக தலைமைக் கழகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் முக்கியக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு ‘போர்வாள்’ நாளிதழின் முன்னோட்டப் பிரதியை வெளியிட்டனர். பின்னர் இந்த நிகழ்வில் பேசிய இபிஎஸ், “போர்வாள் மூலமாக கழகத்தையும் மக்களையும் காப்போம்” என்று உறுதியுடன் வலியுறுத்தினார்.
அதிமுகவின் வரலாற்றில் ஊடகங்கள் எப்போதும் முக்கியப் பங்கு வகித்து வந்துள்ளன. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். காலத்தில் தொடங்கி, புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ‘நமது எம்.ஜி.ஆர்.’, ‘நமது அம்மா’ போன்ற நாளிதழ்களும், பல்வேறு டிஜிட்டல் தளங்களும் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் சக்திவாய்ந்த கருவிகளாகச் செயல்பட்டன. இந்த ஊடகங்கள் மக்கள் மத்தியில் அதிமுகவின் பிம்பத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றின.
எனினும், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஏற்பட்ட தொடர் பிளவுகள் கட்சியின் ஊடக அமைப்புகளையும் பாதித்தன. பல ஊடகங்கள் பல்வேறு தரப்புகளுக்கு இடையே மாறி மாறி நிலைப்பாடு எடுத்தன. குறிப்பாக ‘நமது அம்மா’ உள்ளிட்ட சில ஊடகங்கள் சமீப காலமாக சி.வி. சண்முகம் – எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில், தனது தரப்பின் நிலைப்பாடுகளைத் தெளிவாகவும் தொடர்ச்சியாகவும் மக்களிடம் கொண்டு செல்ல இபிஎஸ் தரப்புக்கு சொந்த ஊடகம் தேவைப்பட்டது.
‘போர்வாள்’ நாளிதழ் இனி அதிமுகவின் அதிகாரப்பூர்வ குரலாக ஒலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கழகப் பொதுச் செயலாளரின் அறிக்கைகள், கட்சி நிகழ்வுகள், தமிழக மக்களின் பல்வேறு பிரச்சினைகள், அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிரான இபிஎஸ் தரப்பின் விமர்சனங்கள் மற்றும் கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் ஆகியவற்றை விரிவாக இந்த நாளிதழ் வெளியிடும். இந்தப் புதிய முயற்சி, அதிமுகவின் உள்ளடி மோதல்களுக்கு மத்தியில் இபிஎஸ் தலைமையை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
கட்சியின் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், மக்களின் குரலுக்கு வலுச்சேர்க்கவும் ‘போர்வாள்’ செயல்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிமுகம் அதிமுகவில் தற்போது நிலவும் அரசியல் சூழலை மேலும் சூடுபிடிக்கச் செய்யும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இபிஎஸ் தரப்பு இனி ஊடக ரீதியாகவும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
