செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே காளவாக்கம் பகுதியில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் நிகழ்ச்சியில் இன்று பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது, ஒரு செய்தியாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் சந்திப்பில், “பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்களுடன் அரசியல் பயணித்த நீங்கள், தற்போது விஜயுடன் இணைந்தது ஏன்?” என்று நாளிதழ் ஒன்றின் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த வைகோ, “பெரியாரை நெஞ்சில் வைத்து வாழ்பவன் நான். அண்ணாவின் நாடாளுமன்ற பேச்சுகளை தொடர்ந்து கேட்டு வளர்ந்தவன். ஆனால் திமுக, நான் கூலிப்படையை வைத்து கொலை செய்ய முயன்றதாக பழிசுமத்தியது. அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று செய்தியாளரிடமே எதிர்கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, “உங்களுக்கு கேள்வி கேட்க உரிமை இருப்பது போல எனக்கும் கேட்க உரிமை உள்ளது. விஜய் சிறு குழந்தை அல்ல; சினிமாவில் சாதித்து, 30 ஆண்டுகளாக மக்கள் இயக்கம் மூலம் பணியாற்றி அரசியலுக்கு வந்தவர். ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு நடந்தபோது இரவோடு இரவாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்தவர்” என்று வைகோ கூறினார்.

மேலும், “திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், ஊழல் அதிகமாக இருந்தது” என்று குற்றம்சாட்டிய அவரிடம், “இத்தனை ஆண்டுகள் திமுக கூட்டணியில் இருந்துவிட்டு இப்போது ஏன் விமர்சிக்கிறீர்கள்?” என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வைகோ, “கூட்டணி தர்மத்திற்காக இதுவரை பேசவில்லை. இப்போது கூட்டணியில் இல்லை; அதனால் பேசுகிறோம்” என்றார்.

இதற்கிடையில், கேள்வி எழுப்பிய நாளிதழைக் குறிப்பிட்டு, “அது மஞ்சள் பத்திரிகை… நீங்களும் மஞ்சள் பத்திரிகையா?” என்று செய்தியாளரை நோக்கி வைகோ ஆவேசமாகக் கூறி, “வெளியே போங்கள்” என தெரிவித்தார்.

இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. மதிமுக நிர்வாகிகள் செய்தியாளரை நோக்கி பாய்ந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் தலையிட்டு செய்தியாளர்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version