முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், இந்திய கம்யூனிஸ்ட் இடம்பெற முயற்சி செய்ததா என்னும் கேள்விக்கு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விடையளித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் உள்பட 10 அமைச்சர்களின் துறைகள், அவர்கள் வகிக்கும் இலாகாக்கள் விவரத்தை மே 16ஆம் தேதி மக்கள் பவன் வெளியிட்டது. இதில் முக்கிய துறைகள் முதலமைச்சர் விஜய் வசமே இருந்தன. சீனியர் அரசியல்வாதியான செங்கோட்டையனுக்கு நிதி அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 34 அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில் முதலமைச்சர் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 24 அமைச்சர்களில் தவெக ஆட்சி அமைய ஆதரவளித்த காங்கிரசுக்கு 2 அமைச்சர்களும், சி.வி.சண்முகம் தரப்பிலான அதிமுக பிரிவுக்கு 8 அமைச்சர்கள் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தவெக ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிய இந்திய கம்யூனிஸ்டுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என தகவல்கள் பரவிய நிலையில் அதனை அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.திருவாரூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு அமைச்சரவையில் இடம்பெறும் கொள்கை திட்டமும் இல்லை, அத்தகைய முயற்சியும் இல்லை எனக் கூறினார். குதிரை பேரம் பற்றி அறியாதவர்கள் கம்யூனிஸ்டுகள். எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட கூட்டணி கட்சித்தலைவர்கள் கூறியிருந்தாலும் அத்தகைய சிந்தனையில் எங்கள் கட்சி ஈடுபடாது என்றார். இது போன்ற பேரங்களில் எங்கள் கட்சிக்கு அனுபவமும் இல்லை. குதிரை பேரம் தொடர்பாக வழக்கு தொடர வேண்டிய நிலை ஏற்பட்டால் சட்டம் தனது கடமையை செய்யட்டும் எனத் தெரிவித்தார்.
