த.வெ.க. கட்சி கொடிக்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய கோரிய மேல்முறையீட்டு மனுவிற்கு, தவெக தலைவர் விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்கள் வணிகச் சின்னமாக பதிவு செய்யப்பட்டுள்ள சிவப்பு மஞ்சள் சிவப்பு நிறத்திலான கொடியை தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என கூறி தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் நிறுவனத் தலைவர் பச்சையப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிற கொடியை பயன்படுத்த தவெகவுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. தவெக கொடிக்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் நிறுவனத் தலைவர் பச்சையப்பன் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், எம்.சுதீர்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவி விசாரித்த நீதிபதிகள் மேல்முறையீட்டு மனு குறித்து பதிலளிக்க தவெக தலைவர் விஜய்க்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version