தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், அரசியல் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இது தொடர்பாக அதிமுக தலைமை ”மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எடப்பாடி பழனிசாமி வருகிற 7-ம் தேதி முதல் தேர்தல் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக கூறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 7 மாவட்டங்களில் 34 சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
வரும் 7-ம் தேதி கோவை புறநகர் வடக்கில் தொடங்கி, 8-ம் தேதி கோவை மாநகர், 10 மற்றும் 11-ம் தேதி விழுப்புரம், 12 மற்றும் 14-ம் தேதி வரை கடலூர், 15-ம் தேதி மயிலாடுதுறை, 16 மற்றும் 17-ம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், 18, 19, 21 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர் என சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி.