கொரோனா காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என திமுக அரசை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று 54 மாதங்கள் கடந்து, ஆட்சியின் ஆயுட் காலமே முடிவுக்கு வரவுள்ள நிலையிலும், உரிய இழப்பீடு வழங்கப்படாத அவல நிலை நீடிக்கிறது. ஒருவேளை வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பதுதான் திராவிட மாடல் அரசு போலும்.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால்,கொரோனா தொற்றின்போது பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்ட நிலையில், அரசு மருத்துவர்கள் தங்கள் உயிரை துச்சமென மதித்து மக்களுக்காக பணியாற்றினர். இவ்வாறு பணியாற்றிய மருத்துவர்களில், அரசு மருத்துவர் விவேகானந்தன் என்பவர் உயிரிழந்தார். இதனையடுத்து மறைந்த மருத்துவர் விவேகானந்தன் அவர்களின் மனைவி கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குமாறு கோரியிருந்தார்.
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் கொரோனா காலகட்டத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்காத தி.மு.க. அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. தி.மு.க.வின் மனிதாபிமானமற்ற செயலுக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, கொரோனா நோய்த் தொற்று தீவிரமாக இருந்த நேரத்தில் பணியில் இருந்தபோது உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தன் அவர்களின் மனைவி உள்பட பணியில் இருந்தபோது இறந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்
