விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்ததில் இருந்து, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு வெளியில் இருந்தும், நேரடியாகவும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் இடம்பறெ இயலாது என ஐயுஎம்எல் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வென்ற ஐயுஎம்எல் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது. இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் அறிவித்த உடன் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்வதென ஐயுஎம்எல் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீன், “ தமிழகத்தில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி வந்துவிடும் என்று எதிர்பார்த்தோம். 60 ஆண்டு காலமாக திமுக தலைமையிலான கூட்டணியில் ஐயூஎம்எல் தொடர்ந்து பயணித்து வந்தது. ஸ்டாலின் முதல்வராக வருவார் என ஐயூஎம்எல் தேர்தலில் உழைத்தது. ஆனால் இறைவனின் நாட்டம் வேறாக அமைந்தது.
ஐயுஎம்எல் வெற்றிக்கு உழைத்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியினருக்கு நன்றி. முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வசிக்கிறோம். நாங்கள் கேட்காத, எதிர்பார்க்காத ஒன்றை தமிழக வெற்றிக் கழகம் எங்களுக்கு கொடுத்துள்ளது. தமிழக அமைச்சரவையில் ஐயுஎம்ல்-ஐ இடம் பெற வைத்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு நன்றி.
தமிழ்நாட்டை தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி செய்கிறது. நல்லாட்சி தொடர வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். இன்றுள்ள அரசியல் சூழலில் திமுக கூட்டணியில் நாம் தொடர்ந்து பயணிக்க இயலாது. இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்” என கூறியுள்ளார்.
