புதிய வக்ஃபு சட்டம் தமிழ்நாட்டில் இதுவரை அமல்படுத்தப்படாத நிலையில், புதிய அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான், இந்த ஆண்டுக்கான ஹஜ் பயண ஏற்பாடுகள் மற்றும் புதிய வக்பு சட்டம் தொடர்பாக முக்கிய விளக்கங்களை அளித்தார்.
ஹஜ் பயணிகள் பாதுகாப்பாகவும், சிரமமின்றியும் புனிதப் பயணத்தை மேற்கொள்ள தமிழக அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்திருந்ததாக அவர் தெரிவித்தார். குறிப்பாக, தமிழ்நாட்டில் இருந்து இந்த ஆண்டு சுமார் 6,000 பேர் ஹஜ் பயணத்தை மேற்கொண்டதாகவும், அவர்களை அழைத்துச் செல்ல 16 விமானங்கள் இயக்கப்பட்டதாகவும் கூறினார். பயணிகளுக்கான தங்குமிடம், மருத்துவ வசதிகள், போக்குவரத்து மற்றும் நிர்வாக ஒருங்கிணைப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
மேலும், வரும் ஆண்டுகளில் ஹஜ் பயணிகளை அதிக வசதிகளுடன் அனுப்புவதற்கான திட்டங்களும் அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும்,ஹஜ் குழு மற்றும் தமிழக அரசின் ஒருங்கிணைந்த முயற்சியால் இந்த ஆண்டு பயணம் வெற்றிகரமாக நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
புதிய வக்பு சட்டம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஷாஜகான், “புதிய வக்ஃபு சட்டம் தற்போது தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படவில்லை. இனியும் அந்தச் சட்டம் மாநிலத்தில் அமல்படுத்தப்பட மாட்டாது.முநணநைய” என்று அவர் உறுதியாக தெரிவித்தார்.
புதிய சட்டத்தின் கீழ் முஸ்லிம் அல்லாத ஒருவர் வக்பு வாரிய உறுப்பினராக நியமிக்கப்படுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “தமிழ்நாட்டில் அந்தச் சட்டம் அமல்படுத்தப்படாததால், அத்தகைய சூழல் தற்போது இல்லை. இதுவரை அமல்படுத்தப்படவில்லை; இனியும் அமல்படுத்தப்பட மாட்டாது” என்று மீண்டும் உறுதிபட தெரிவித்தார்.
