மக்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்கள் நடத்திய போராட்டம் குறித்து பேசியபோது, ஆளுங்கட்சி பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
ராகுல் காந்தி தனது பேச்சின்போது, “மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறை அல்லது வெறுப்பின் வெளிப்பாடு அல்ல. அது நாட்டின் இளைஞர்களின் உணர்வுகள், எதிர்காலம் குறித்த அச்சம் மற்றும் எதிர்பார்ப்புகளின் ஜனநாயகபூர்வமான வெளிப்பாடு. இந்த போராட்டத்தை எந்த அரசியல் கட்சியும் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. ஆளும் பாஜக உட்பட அனைத்து கட்சிகளும் மாணவர்களின் ஜனநாயக உரிமையை மதிக்க வேண்டும்” என்றார்.
மேலும், “பாஜக தலைவர்கள் தங்களது சொந்த குழந்தைகளிடம் இந்த மாணவர் போராட்டம் குறித்து கேட்டுப் பாருங்கள். போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் பக்கமே அவர்களது குழந்தைகளின் ஆதரவு இருப்பதை உணர்வார்கள். இந்த போராட்டத்தில் எந்தத் தவறும் இல்லை. மாறாக, ஒவ்வொரு இந்தியரும் பெருமையுடன் பார்க்க வேண்டிய நிகழ்வு இது. இளைஞர்களின் கருத்தை கேட்காதவர்கள் முட்டாள்கள்” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
இந்தக் கருத்துக்கு பாஜக எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, விவாதப் பொருளுக்கு தொடர்புடைய விஷயங்களை மட்டும் பேசுமாறு ராகுல் காந்தியை அறிவுறுத்தினார்.
அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, “நான் மாணவர்களின் மனநிலையைப் பற்றித்தான் பேசுகிறேன். யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை,” என்று விளக்கம் அளித்தார். இருப்பினும், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் மக்களவையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
