விஜய் பிரச்சாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாகக் கூறி தவெக தாக்கல் செய்த வழக்கிற்கு ஆதரவாக தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தவெக கட்சியை தொடங்கியுள்ள விஜய் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பிரச்சார சுற்றுப் பயணங்களுக்கு காவல் துறையினர் கடுமையான நிபந்தனைகள் விதித்துள்ளதாக கூறி தவெக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், பிரச்சாரத்துக்கு அனுமதி  கோரும் விண்ணப்பங்களை எந்த பாரபட்சமும் இன்றி பரிசீலித்து, அனுமதி வழங்கக் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு செப்டம்பர் 24 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி தேசிய மக்கள் சக்திக் கட்சி தலைவர் எம்எல்ஏ ரவி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், “தமிழக ஆளுங்கட்சி, எதிர்கட்சிகளின் குரலை நெரித்து, ஜனநாயகத்தை ஒடுக்க முயற்சிக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு இவ்வளவு கடுமையான நிபந்தனைகளை விதிக்காத அரசு , விஜய்க்கு விதிக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக போலீசார், ஆளுங்கட்சியான திமுகவின் ஒரு அணியாக செயல்படுகின்றனர் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version