காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பது குறித்த கவலையை மீண்டும் எழுப்பி உள்ள, காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஏப்ரல் 29-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 50-வது கூட்டம், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை அமைப்பதற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையின் அடிப்படையில், அந்த அணை கட்டுவதற்கு அனுமதி அளித்து பரிந்துரை செய்யுமாறு மத்திய நீர்வள ஆணையம் 2019-ல் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தைக் கேட்டுக் கொண்டது. காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் அந்த விரிவான திட்ட அறிக்கையை விவாதிப்பதற்குத் தமிழ்நாடு அரசு தனது எதிர்ப்பைத் தெரிவித்தது. இதன் விளைவாக, அந்த விரிவான திட்ட அறிக்கை நீண்ட காலமாக விவாதிக்கப்படாமலே இருந்தது. அது குறித்து மத்திய நீர்வள ஆணையமே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறிய நீர் மேலாண்மை ஆணையம், அந்த அறிக்கையைத் திருப்பி அனுப்பியது.

இந்தநிலையில், மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கையை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விவாதிப்பதற்கு எவ்விதத் தடையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

தற்போது, தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ளநிலையில், புதிய அரசுகள் இன்னும் பொறுப்பேற்கவில்லை. இத்தகைய சூழலில், கொள்கை முடிவுகளை எடுக்க முடியாத ஒரு இடைக்காலத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடத்தப்படுவது முறையற்றது என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளின் அடிப்படையில், கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு நீர் விடுவிப்பது குறித்து மட்டுமே காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் விவாதிக்குமானால், அதில் எவ்விதப் பிரச்சினையும் இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை அமைப்பதற்கு எந்த வகையிலாவது ஒப்புதல் பெறத் தீவிரமாக முயன்று வரும் கர்நாடக அரசு, தற்போதைய சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்திலேயே மேகதாது அணை குறித்தும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் கடந்த நவம்பர் மாதத் தீர்ப்பின்படி, மேகதாது விவகாரத்தை விவாதிக்க ஆணையத்திற்குத் தடை இல்லை என்றும் ஆனால், தமிழகத்தில் ஒரு முழுமையான அதிகாரம் கொண்ட அரசு இல்லாத போது, அதிகாரிகளால் கொள்கை ரீதியான வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் வாழ்வாதாரமான காவிரி நீர் உரிமையில் எந்தவொரு ஒருதலைப்பட்சமான முடிவும் எடுக்கப்படக் கூடாது என்று கூறியுள்ள அன்புமணி, அதிகார இடைவெளியைப் பயன்படுத்தி கர்நாடகா தனது மேகதாது திட்டத்தை முன்னெடுக்க முயல்வது தமிழகத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, மத்திய அரசும், காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் ஜனநாயக ரீதியாகப் புதிய அரசுகள் அமையும் வரை காத்திருப்பதே முறையானது என்று அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version