கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மூலம் எச்சரிக்கை மணி அடித்துள்ளதாகவும், வகுப்புவாத சக்திகளின் பக்கம் மக்கள் செல்வதை தடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் இரு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (டிச. 13) நடைபெற்றன. இதில், ஆளும் இடதுசாரிகள் கூட்டணி (LDF) பின்னடைவை சந்தித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி (UDF) அதிக இடங்களை வென்றுள்ளது. மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கூட்டணி (NDA) கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஆளும் இடதுசாரி கூட்டணியின் தோல்வி குறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மூலம் எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் எதிர்பார்த்த பெருவெற்றியை அடைய முடியாததற்கான காரணங்கள் என்ன என்பது பற்றி விரிவாக ஆராயப்படும் என்று தெரிவித்துள்ளார். தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பின்னர் மீண்டும் முன்னேறுவோம் என்று அவர் கூறியுள்ளார்.
வகுப்புவாத சக்திகளின் தவறான தகவல்கள் மற்றும் பிளவுபடுத்தும் தந்திரங்களுக்கு மக்கள் பலியாகிவிடாமல் இருப்பதை உறுதி செய்ய, அதிக விழிப்புணர்வு தேவை என்பதற்கான எச்சரிக்கை மணியாக தேர்தல் முடிவுகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மக்கள் ஆதரவை மேலும் வளப்படுத்தவும், அதன் அடிப்படையை பலப்படுத்தவும் உறுதியுடன் செயல்பட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.
