மதுரையில் நடைபெற்ற தவெக மாநில மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் கூறிய குட்டி ஸ்டோரி வைரலாகி வருகிறது.
மதுரையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு இன்று நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய விஜய், வழக்கம் போல ’குட்டி ஸ்டோரி’ ஒன்று கூறி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
ஒரு நாட்டில் ஒரு ராஜா தனக்கு பக்கபலமாக இருப்பதற்காக ஒரு தளபதியை தேடுகிறார். சரியான தகுதிகளோடு ஒரு 10 பேர் செலக்ட் ஆகுறாங்க. அதில் ஒருவரை மட்டும்தான் தேர்வு செய்ய முடியும். எனவே அவர்களுக்கு ஒரு டெஸ்ட் வைக்கிறார். அந்த 10 பேரிடமும் விதை நெல்லை கொடுத்து அதனை நன்றாக வளர்த்துக் கொண்டு வரவேண்டும் எனச் சொல்லி 3 மாதங்கள் கழித்து வாங்க என்று கூறி அனுப்பி வைக்கிறார். 3 மாதம் கழித்து வரும்போது அதில் ஒருவர் ஆள் உயரத்துக்கு வளர்த்திருந்தார்.
ஒருவர் தோள் உயரத்துக்கு வளர்த்திருந்தார். 9 பேர் வளர்த்திருந்தார்கள். ஒருவர் மட்டும் வெறும் தொட்டியை கொண்டு வந்திருந்தார்.என்ன என்று கேட்டதற்கு, நானும் தண்ணீர் ஊற்றிப் பார்க்கிறேன், உரம் வைத்துப் பார்க்கிறேன்.. வளரவே மாட்டேன் என்கிறது ராஜா எனக் கூறினார். அவரை கட்டியணைத்த ராஜா, இனி இனிதான் என் தளபதி எனக் கூறினார். ஏனென்றால், அந்த 10 பேரிடமும் ராஜா கொடுத்தது அவித்த நெல். அது முளைக்கவே முளைக்காது.
அந்த 9 திருட்டுப் பயல்களும் என்ன பண்ணியிருக்காங்கன்னா, வேறு விதை நெல்லை வாங்கி வளர்த்து ராஜாவையும், மக்களையும் ஏமாற்றி உள்ளனர். ஒருவர் மட்டும் உண்மையை போட்டு உடைத்துவிட்டார். ஒரு நாட்டுக்கு திறமை எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு உண்மையும் நேர்மையும் முக்கியம். இப்போது நீங்கள் எல்லோரும் தான் ராஜா. நீங்கள் தேர்ந்தெடுக்கப்போகும் அந்த தளபதி யார்?” எனக் கூறினார்.