இலங்கைக்கு எதிரான 2வது T20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 22ம் தேதி நடந்த முதல் டி20 போட்டியில் இலங்கை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
இந்தநிலையில், விசாகப்பட்டினத்தில் 2வது டி20 போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சமரி அதபத்து 31ரன்களும், ஹர்ஷிதா சமரவிக்ரம 33 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது.
129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின், ஸ்மிருதி மந்தனா 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஷபாலி வர்மா அரை சதமடித்தநிலையில், ஜெமிமா 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 11.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து 7 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
