நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுக்கும் வீரருக்கான ‘ஆரஞ்சு தொப்பி’ போட்டி நேற்று உச்சகட்ட விறுவிறுப்பை எட்டியது. டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, நட்சத்திர வீரர் விராட் கோலி 328 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார். ஆனால், பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கே.எல். ராகுல் ருத்ரதாண்டவம் ஆடி 151* ரன்களைக் குவித்தார். இதன் மூலம் மொத்தமாக 357 ரன்களை எட்டிய ராகுல், கோலியைப் பின்னுக்குத் தள்ளி ஆரஞ்சு தொப்பியைத் தன்வசப்படுத்தினார்.
ராகுலின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. நேற்று இரவு நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) மற்றும் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையிலான போட்டியில் ரன் வேட்டை தொடர்ந்தது. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணியின் வீரர் வைபவ் 103 ரன்களை விளாசினார். முதல் இன்னிங்ஸ் முடிவில் வைபவ்வும் 357 ரன்களை எட்டியிருந்தாலும், சிறந்த சராசரி அடிப்படையில் கே.எல். ராகுலிடமிருந்து அந்தத் தொப்பி வைபவ்விடம் கைமாறியது. இதனால் ஒரே நாளில் மூன்றாவது முறையாக முதலிடம் மாறியது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இதேபோல், நேற்றைய ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 57 ரன்களைச் சேர்த்தார். இதன் மூலம் 380 ரன்களை எட்டிய அவர், வைபவ்வை முந்தி ஆரஞ்சு தொப்பியைத் தட்டிச் சென்றார். ஒரே நாளில் விராட் கோலி, கே.எல். ராகுல், வைபவ் என மூவரைத் தாண்டி நான்காவதாக அபிஷேக் சர்மாவிடம் இந்தத் தொப்பி வந்து சேர்ந்தது. ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறுகிய காலத்தில் இத்தனை வீரர்களிடம் ஆரஞ்சு தொப்பி கைமாறியது இதுவே முதல்முறை எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
