இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. எப்போதும் கம்பீரமாகத் தோற்றமளிக்கும் ஸ்டோக்ஸ், தற்போது கன்னங்கள் ஒட்டிப்போய் மிகவும் மெலிந்து காணப்படுகிறார்.
கடந்த ஜனவரி மாதம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் பந்து அவரது முகத்தில் பலமாகத் தாக்கியுள்ளது. இந்த விபத்தில் அவரது கன்ன எலும்புகள் கடுமையாகச் சேதமடைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு முகத்தில் சிக்கலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சிகிச்சைக்குப் பின்னரே அவரது முகம் அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றமடைந்துள்ளது.
இந்த விபத்து குறித்து மனம் திறந்துள்ள பென் ஸ்டோக்ஸ், இது தனது வாழ்வின் மிகவும் பயங்கரமான தருணம் என்று குறிப்பிட்டுள்ளார். “அந்தப் பந்து முகத்தின் வேறு பகுதியில் பட்டிருந்தால், நான் இன்று உயிரோடு இருந்திருக்க வாய்ப்பில்லை” என அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்ததை எண்ணி அவர் வேதனைப்பட்டுள்ளார். தற்போதைய உடல்நிலை மாற்றத்தால் அவர் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் முழு குணமடைந்து பழையபடி மைதானத்திற்குத் திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
