ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான விறுவிறுப்பான போட்டியின் போது, 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 21 பந்துகளில் 48 ரன்கள் குவித்து அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார். அவரது இந்த அதிரடி ஆட்டம் அந்த அணி 226 ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக அமைந்தது.
இந்தநிலையில், இந்தப் போட்டியின் போது அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. வருண் சக்கரவர்த்தி பிடித்த கேட்ச் தரையோடு தரையாக இருந்ததால் அது சரியான கேட்ச் தானா? என்ற கேள்வி இருந்தது. எனினும், மூன்றாவது அம்பயர் சரியான ஆதாரம் இல்லாத நிலையில் அது கேட்ச் தான் என அறிவித்தார். இதை அடுத்து அபிஷேக் சர்மா பெரும் ஏமாற்றத்துடன் வெளியேறினார். அப்போது அவர் அதிருப்தியுடன் வெளியேறினார்.
அப்போது அபிஷேக் சர்மா பயன்படுத்திய வார்த்தைகள் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறி இருந்ததாக போட்டி நடுவர் கண்டறிந்துள்ளார். இதற்காக அவருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவருக்கு ஒரு ‘டிமெரிட்’ புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், அவர் விதிகளின் பிரிவு 2.3-ன் (Article 2.3) கீழ் தவறு இழைத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் விதிகளின்படி, ஆர்டிக்கல் 2.3 என்பது ஒரு வீரர் ஆட்டத்தின் போது ஆபாசமான, வசைபாடும் அல்லது அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைக் குறிப்பதாகும். கேகேஆர் அணிக்கு எதிராக அவர் ஆட்டமிழந்து வெளியேறிய போது அல்லது களத்தில் நிலவிய பதற்றமான தருணத்தில், அவர் இத்தகைய முறையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும், அவர் குறிப்பாக எந்த வார்த்தையை உபயோகித்தார் அல்லது யாருக்கு எதிராகப் பேசினார் என்பது குறித்த நேரடித் தகவல்களை ஐபிஎல் நிர்வாகம் தனது அறிக்கையில் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை.
பொதுவாக ‘நிலை 1’ (Level 1) வகை குற்றங்களுக்கு போட்டி நடுவரின் முடிவே இறுதியானது என்பதால், அபிஷேக் சர்மா தனது தவறை ஒப்புக்கொண்டு தண்டனையை ஏற்றுக்கொண்டார். ஒரு டிமெரிட் புள்ளி வழங்கப்பட்டுள்ளதால், வரும் போட்டிகளில் அவர் தனது கள நடத்தையில் அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
