தெ.ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில், 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இதில் கட்டாக்கில் கடந்த 9-ம் தேதி நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டி நியூ சண்டிகரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணி தரப்பில் எந்த மாற்றமும் இல்லை.

இதையடுத்து தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி வீரர் டி ஹாக் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். இதேபோல், மறுமுனையில் விளையாடிய தெ.ஆப்பிரிக்க அணி வீரர்களும் கட்டு கோப்பாக விளையாடினர்.

சிறப்பாக விளையாடிய டி ஹாக் 46 பந்துகளில் 90 ரன்கள் (7 சிக்சர்கள், 5 பவுண்டரிகள்) விளாசிய நிலையில், ரன் அவுட்டானார். 10 ரன்களில் டி20 கிரிக்கெட் சதத்தை அவர் கோட்டை விட்டார்.

சீராக விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து, 213 ரன்களை எடுத்தது.

இதன்மூலம் இந்திய அணிக்கு, தென்னாப்பிரிக்க அணி 214 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன்பின்னர் 214 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

அதிரடி ஆட்டக்காரர் அபிசேக் சர்மா 17 ரன்கள், கில் பூஜ்யம், அக்சார் படேல் 21 ரன்கள், கேப்டன் சூரியகுமார் யாதவ் 5 ரன்கள், ஹர்திக் பாண்டியா 20 ரன்கள், ஜிதேஸ் சர்மா 27 ரன்களில் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், மறுபக்கம் திலக் வர்மா மட்டும் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார்.

அவருக்கு ஏற்றார்போல, மறுபக்கத்தில் விளையாடிய வீரர்கள் நிலைத்து நின்றும், அதிரடியாகவும் விளையாடவில்லை. இதையடுத்து 19.1 ஓவரில், இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களை மட்டுமே எடுத்து 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

தென்னாப்பிரிக்க அணியின் இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில், 2 அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 1-1 என்று சமநிலையில் உள்ளன.

2 அணிகள் இடையேயான 3வது டி20 கிரிக்கெட் போட்டி வருகிற 14-ம் தேதி தருமசாலாவில் நடைபெறவுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version