2026 தேசிய பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவின் முன்னணி  வீராங்கனை மிராபாய் சானு அசத்தலான சாதனை படைத்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் மோடிநகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 48 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற மிராபாய், ஒரே நிகழ்வில் மூன்று தேசிய சாதனைகளை முறியடித்து தங்கப் பதக்கத்தையும் வென்றார்.. அவரின் அபாரமான செயல்திறன், போட்டி அரங்கையே உற்சாகத்தில் மூழ்கடித்தது. இதன் மூலம் மிராபாய் சானு தங்கப் பதக்கத்தை வென்று, இந்திய பளுதூக்குதலில் மிகப் பெரிய நம்பிக்கையாக தன்னை மீண்டும் நிரூபித்துள்ளார்.

48 கிலோ எடைப்பிரிவில் தொடக்கத்திலிருந்தே மிராபாய் சானுவின் தன்னம்பிக்கை வெளிப்பட்டது. ஸ்நாட்ச் பிரிவில் 89 கிலோ எடையை தூக்கி புதிய தேசிய சாதனையை அவர் பதிவு செய்தார். தொடர்ந்து கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 116 கிலோ எடையை தூக்கி இன்னொரு தேசிய சாதனையையும் முறியடித்தார்.

இதன் மூலம் மொத்தமாக 205 கிலோ எடையை தூக்கிய மிராபாய், இந்த எடைப்பிரிவில் இதுவரை காணாத சிறந்த தேசிய செயல்திறனை வெளிப்படுத்தினார். ஸ்நாட்ச், கிளீன் அண்ட் ஜெர்க் மற்றும் மொத்த எடை என மூன்று பிரிவுகளிலும் தேசிய சாதனைகள் முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மிராபாய் சானுவின் இம்முறை செயல்பாடு, அவரது சமீபத்திய சர்வதேச சாதனையைவிடவும் சிறப்பாக அமைந்தது. 2025 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற போது அவர் மொத்தமாக 199 கிலோ எடையை தூக்கியிருந்தார். ஆனால் இம்முறை தேசிய போட்டியில் அவர் 205 கிலோ எடையை தூக்கி, தன்னுடைய முந்தைய சாதனையையே முறியடித்துள்ளார். ஸ்நாட்ச் பிரிவில் 91 கிலோ எடையை தூக்க முயற்சியில் அவர் தோல்வியடைந்திருந்தாலும், அது அவரது அபாரமான செயல்திறனின் பிரகாசத்தை எந்த வகையிலும் குறைக்கவில்லை.

போட்டிக்குப் பிறகு பேசிய மீராபாய் சானு, 48 கிலோ எடைப் பிரிவில் இந்தச் செயல்பாடு தனக்கு மிகவும் சிறப்பானது என்று கூறினார். தான் இதற்கு முன்பு 49 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்டதாகவும், ஆனால் புதிய எடைப் பிரிவுக்கு மாறுவது கடினமாக இருந்ததாகவும் அவர் விளக்கினார். இருப்பினும், சாதனை படைத்தது தனது வளர்ந்து வரும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார். ஸ்னாட்ச் பிரிவில் 90 கிலோவுக்கு மேல் தூக்குவதே தனது அடுத்த இலக்கு என்றும், வரும் நாட்களில் அதற்காகத் தயாராகப் போவதாகவும் மீராபாய் தெரிவித்தார்.

மேலும், இந்த பிரிவில், அகில இந்திய காவல்துறையைச் சேர்ந்த ராதா சோனி மொத்தம் 183 கிலோகிராம் எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். கோமல் கோஹரும் சிறப்பாகச் செயல்பட்டு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் மீராபாய் சானு இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்றார். 2024 ஒலிம்பிக்கில் அவர் நான்காவது இடத்தைப் பிடித்து பதக்கம் வெல்லத் தவறினார். இதைத் தொடர்ந்து, அவர் 49 கிலோ எடைப் பிரிவிலிருந்து 48 கிலோ எடைப் பிரிவுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த புதிய பிரிவில் அவர் நிகழ்த்திய சாதனைப் படைப்பு, வரவிருக்கும் முக்கியப் போட்டிகளில் மீராபாய் மீண்டும் இந்தியாவுக்காக ஒரு வலுவான போட்டியாளராகத் திகழ முடியும் என்பதைக் காட்டுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version