ஐபிஎல் 19 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை எந்தவொரு இந்திய வீரரும் எட்டாத 150 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டி கே.எல். ராகுல் இமாலய சாதனை படைத்துள்ளார். டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடிய ராகுல் 67 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 152 ரன்கள்  விளாசினார்.

இதன் மூலம் கிறிஸ் கெய்ல் (175*), பிரண்டன் மெக்கல்லம் (158*) ஆகியோருக்கு அடுத்தபடியாக, ஐபிஎல் போட்டியில் 150 ரன்களுக்கு மேல் எடுத்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அதிரடியாக விளையாடி தனது மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ராகுல், டெல்லி அணி 264 ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக இருந்தார்.

இருப்பினும், ராகுலின் இந்த வரலாற்றுச் சாதனை வெற்றியில் முடியாமல் போனது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. டெல்லி நிர்ணயித்த 265 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி, ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச ரன் சேஸ் (Highest Run Chase) செய்து புதிய சாதனை படைத்தது. பஞ்சாப் அணி 18.5 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்து வெற்றி வாகை சூடியது.

2024-ல் கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை சேஸ் செய்த தனது முந்தைய சாதனையை பஞ்சாப் அணியே தற்போது முறியடித்துள்ளது. ராகுல் சதம் அடிக்கும் போதெல்லாம் அவரது அணி தோல்வியைத் தழுவும் என்ற சென்டிமென்ட் இந்த முறையும் தொடர்ந்தது சோகமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version