அகமதாபாத்தில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்த முக்கியமான ஆட்டத்திற்கு முன்னதாக, இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

தொடரில் சில வீரர்களின் பார்ம் கவலையளிக்கும் வகையில் இருந்தாலும், இறுதிப்போட்டி போன்ற பெரிய ஆட்டத்தில் அணியில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, 7 இன்னிங்ஸ்களில் 89 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள ஓப்பனிங் பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா மற்றும் சமீபத்திய போட்டிகளில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி ஆகியோரை அணியில் தொடரச் செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார். குல்தீப் யாதவை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தாலும், வருண் சக்கரவர்த்தி மீதே தான் நம்பிக்கை வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

“அபிஷேக் மற்றும் வருண் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடாவிட்டாலும், இந்த அணியே இந்தியாவை இறுதிப்போட்டி வரை கொண்டு வந்துள்ளது. எனவே, கடைசி நேரத்தில் பெரிய மாற்றங்களைச் செய்வது சரியாக இருக்காது” என்று ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் குறிப்பிட்டுள்ளார். எட்டாவது பேட்ஸ்மேன் வரை பலமாக இருக்கும் இந்த அணியில், அனைவரும் ஒரே நேரத்தில் சிறப்பாக விளையாட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகாஷ் சோப்ரா பரிந்துரைத்த பிளேயிங் லெவன்: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version