ஐபிஎல்லை போன்றே கிரிக்கெட் ரசிகர்களின் பெருமித்த வரவேற்பை பெண்கள் ஐபிஎல் என கூறப்படும் மகளிர் பிரீமியர் லீக்கும் பெற்றுள்ளது. பெண்கள் கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் விதமாக WPL தொடரானது 2023 முதல் தொடங்கி நடத்தப்பட்டுவருகிறது. இதிலும், தற்போது, உலகக்கோப்பையை வென்ற பின், பெண்கள் கிரிக்கெட் மீது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தை காட்டி வருகின்றனர். 3 சீசன்களை கடந்துள்ளநிலையில், 4வது மற்றும் 2026ம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 5ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடர் நவி மும்பை, வதோதராவில் நடத்தப்படவுள்ளன.
இந்த சீசனில் ஆறு அணிகள் பங்குபெறும் நிலையில், ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் லாரா வால்வார்ட் போன்ற நட்சத்திர வீராங்கனைகள் இதில் கலந்து கொள்வார்கள். WPL 2026 போட்டியில் UP வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய ஆறு அணிகள் இடையே 22 போட்டிகள் நடைபெறும். இறுதிப் போட்டி பிப்ரவரி 5 ஆம் தேதி வதோதராவில் நடைபெறும்.
மகளிர் பிரீமியர் லீக் 2026 நேரடி ஒளிபரப்பைப் பார்க்க விரும்பினால், அனைத்து போட்டிகளையும் ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஸ்ட்ரீம் செய்யலாம். ஹாட்ஸ்டார் பல மொழிகளை வழங்கும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பும்.
கூடுதலாக, நீங்கள் மகளிர் பிரீமியர் லீக் 2026 ஐ இலவசமாகப் பார்க்க விரும்பினால், அதற்கான ஏற்பாடும் உள்ளது. இருப்பினும், இதற்கு உங்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் திட்டம் தேவைப்படும். உங்கள் சிம் திட்டத்தில் ஹாட்ஸ்டார் தொகுப்பு இருந்தால், நீங்கள் அதை எளிதாக அனுபவிக்கலாம். குழு நிலை முதல் இறுதிப் போட்டி வரையிலான போட்டிகளை நீங்கள் பார்க்க முடியும்.
WPL 2026 போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பப்படும், டாஸ் அரை மணி நேரத்திற்கு முன்னதாக மாலை 7 மணிக்கு நடைபெறும். முதல் இன்னிங்ஸுக்குப் பிறகு 15 நிமிட இடைவேளை இருக்கும், அதன் பிறகு இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கும். திட்டமிட்டபடி போட்டி இரவு 11 மணிக்கு முடிவடையும்.
முதலிரண்டு சீசன்களில் முதல் சீசனை ஹர்மன்ப்ரீத் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், இரண்டாவது சீசனை ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணியும் WPL கோப்பைகளை கைப்பற்றி அசத்தின. மேலும் 2025ம் ஆண்டு நடத்தப்பட்ட 3வது சீசனில் மும்பை அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது.
மேலும் இந்த தொடருக்கான வீராங்கனைகள் மெகா ஏலமும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த நிலையில், ஒவ்வொரு அணியும் போட்டிக்கான தீவிர தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் யுபி வாரியர்ஸ் அணியும் தங்கள் வேலைகளைத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, எதிர் வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான யுபி வாரியர்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஆஸ்திரேலியாவின் மெக் லெனிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த மெக் லெனிங்கை அந்த அணி ஏலத்திற்கு முன்னதாக விடுவித்தது. இதனையடுத்து ஏலத்தில் யுபி வாரியர்ஸ் அணியானது ரூ. 1.9 கோடிக்கு மெக் லெனிங்கை ஏலத்தில் ஒப்பந்தம் செய்திருந்த நிலையில், தற்சமயம் அவரை அணியின் கேப்டனாகவும் நியமித்துள்ளது. இதன் காரணமாக இந்திய வீராங்கனை தீப்தி சர்மா அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
