செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழத்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள அரசினர் பாதுகாப்பு இல்லத்திலிருந்து 12 சிறார்கள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 80-க்கும் மேற்பட்ட சிறார்கள் இந்த பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நள்ளிரவில் அங்கு பணியிலிருந்த வார்டன் மற்றும் வாயில்காவலர்களை திடீரென தாக்கிய 12 சிறார்கள், காவலில் இருந்து தப்பி ஓடினர்.

பாதுகாப்பு இல்லத்திலிருந்து தப்பிய சிறார்கள், அவ்வழியாகச் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளை வழிமறித்துத் தாக்கியுள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து செல்போன்கள், பணம் மற்றும் இருசக்கர வாகனங்களையும் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். இல்லத்தின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தையும் அவர்கள் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பாதுகாப்பு இல்ல அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தினர். சிறார்கள் தப்பியோடியதன் பின்னணியில் ஏதேனும் முன்திட்டமிடல் உள்ளதா, அவர்கள் எந்த திசையை நோக்கிச் சென்றனர் என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

தப்பியோடிய சிறார்களைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, இரவு நேரத்தில் முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனங்கள் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. சென்னை வழியாகத் தென் மாவட்டங்களுக்குச் சென்ற அரசுப் பேருந்துகளிலும் காவல்துறையினர் இறங்கி முழுமையான சோதனையில் ஈடுபட்டனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version