சிவகங்கை அருகே சோழபுரம் எட்டிச்சேரிக் கண்மாயில், 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மிக அரிய வகையான “ஆசிரியம்” கல்வெட்டு ஒன்றை சிவகங்கை தொல்நடைக் குழுவினர் கண்டெடுத்துள்ளனர்.
புலிச் சிற்பம் மற்றும் மங்கலச் சின்னங்களுடன் கூடிய இந்தக் கல்வெட்டு, இப்பகுதியின் பழங்கால வணிக முறையையும் வீரத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. சோழபுரம் பகுதியைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பவர், தங்கள் ஊர்க் கண்மாயில் ஒரு விசித்திரமான கல் இருப்பதாகச் சிவகங்கை தொல்நடைக் குழுவிற்குத் தகவல் அளித்தார். அதன்பேரில், தொல்நடைக் குழுவின் நிறுவனர் புலவர் காளிராசா தலைமையிலான குழுவினர் அந்த இடத்தில் தீவிர கள ஆய்வு மேற்கொண்டனர்.
சோழபுரம் எட்டிச்சேரிக் கண்மாயின் நடுப்பகுதியில், உள்கடையில் உள்ள குமிழித் தூண் அருகே இந்தக் கல்வெட்டு கண்டறியப்பட்டது. இது சுமார் 3 அடி உயரமும், ஒண்ணேகால் அடி அகலமும் கொண்டதாக உள்ளது.கல்வெட்டின் தனித்துவமான அமைப்புகள்:புலிச் சிற்பம்: கல்வெட்டின் மேற்பகுதியில் ஒரு காலைத் தூக்கியபடி இருக்கும் புலிக் உருவம் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது.
‘ஸ்வஸ்தி ஸ்ரீ’ என்ற மங்கலச் சொல்லுடன் தொடங்கும் இக்கல்வெட்டின் இறுதிப் பகுதியில் வில், அம்பு மற்றும் இரண்டு குத்துவிளக்குகள் மங்கலச் சின்னங்களாகக் காட்டப்பட்டுள்ளன.கல்வெட்டு கூறும் வரலாறு:புலியைக் கொன்ற வீரனுக்குப் பரிசு:’எட்டி’ என்ற வணிகப் பட்டத்தைக் கொண்ட ‘எரியன்’ என்பவன், செயங்கொண்ட சோழபுரம் (தற்போதைய சோழபுரம்) என்னும் இவ்வூரில் தங்களைப் புலியிடம் இருந்து காப்பாற்றிய ஒரு வீரனுக்கு ‘ஆசிரியம்’ (பாதுகாப்பு/நன்கொடை) வழங்கிய செய்தியை இக்கல்வெட்டு விவரிக்கிறது.
அக்காலத்தில் வணிகக் குழுக்களுடன் (வணிகச் சாத்து) வந்த வீரன், அவர்களைக் காப்பதற்காகப் புலியோடு சண்டையிட்டு அதைக் கொன்று, தானும் உயிர் நீத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவனது தியாகத்தைப் போற்றும் வகையிலும், அவனது சந்ததியினரைப் பாதுகாக்கும் பொருட்டும் இந்த எரியன் என்ற வணிகன் இந்தக் கண்மாயை ஏற்படுத்திக் கொடுத்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.இதற்குச் சான்றாக, இன்றும் இந்தக் கண்மாய் ‘எட்டி’ என்ற வணிகப் பெயரைக் கொண்டு ‘எட்டிச்சேரிக் கண்மாய்’ என்றே அழைக்கப்பட்டு வருகிறது.
இவ்வூரில் உள்ள மாறவர்மன் சுந்தரபாண்டியனின் பழமையான கல்வெட்டுகளில், இந்த ஊர் ‘முடிகொண்ட சோழபுரம்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த புதிய கல்வெட்டில் இவ்வூரின் பெயர் ‘செயங்கொண்ட சோழபுரம்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பது வரலாற்று ஆய்வில் மிக முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறது எனப் புலவர் காளிராசா தெரிவித்துள்ளார்.
