அரசமைப்புச் சட்டத்தின் மத உரிமைகளுக்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் குர்பானி தடை உத்தரவு விவகாரத்தில், தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்திட வேண்டும் எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பக்ரீத் பெருநாள் அன்று எருது, காளை உள்ளிட்ட கால்நடைகளை அரசு அனுமதியுள்ள பதிவு செய்யப்பட்ட இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் பலியிடுவதற்கு உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவு, இஸ்லாமியப் பெருமக்களின் சமய உரிமைகளைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், தொன்றுதொட்டு விலங்குகளைப் பலியிட்டு வழிபடும் வழக்கம் கொண்ட தமிழகத்தின் ஒட்டுமொத்தப் பூர்வகுடி சமூகங்களின் பாரம்பரிய வழிபாட்டு உரிமைகளுக்கும் முற்றிலும் எதிரானதாகும்.
குறிப்பிட்ட சமூகத்தின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் ஆபத்தான போக்காகும். இந்த விவகாரத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டிய சட்டப் பொறுப்பு இருந்தும், தமிழக அரசு காலம் தாழ்த்துவது சமூகத்தில் தேவையற்ற பதற்றத்திற்கே வழிவகுக்கும்.
இந்தத் தீர்ப்பைப் பயன்படுத்தி, வடமாநிலங்களைப் போலத் தமிழகத்திலும் ஒரு பதற்றமான சூழலை உருவாக்க இந்துத்துவ அமைப்புகள் முயன்றுள்ளன. இத்தகைய கும்பல்கள் மாடுகளைக் கைப்பற்றும் அத்துமீறல்களில் ஈடுபடுவதும், சமூகப் பதற்றத்தை உருவாக்குவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் சூழல் உருவான போதிலும், தமிழக அரசோ அல்லது தமிழக முதல்வரோ இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காப்பது சரியல்ல. முக்கியமாக, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் இந்த விவகாரத்தில் இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காப்பது ஏமாற்றமளிக்கிறது.
உயர்நீதிமன்றத்தின் இந்த தடை உத்தரவு வெறும் முஸ்லிம்களுக்கானது மட்டுமல்ல; இது கால்நடைகளை பலியிடும் பாரம்பரிய வழக்கம் உள்ள அனைத்து சமூக மக்களுக்கும் எதிரானது என்பதால், தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்.
இதன் மூலம், தமிழகத்தில் பாரம்பரியமாக நிகழ்ந்து வரும் மதச் சடங்குகளையும், பண்டிகைக் கால வழிபாட்டு உரிமைகளையும் மக்கள் வழக்கம்போல அச்சமின்றித் தொடர்வதை அரசு உறுதி செய்திட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
