தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (30.03.2026) தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் ஆர்வத்துடன் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டதை அடுத்து, நேற்று காலை 11 மணி முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. முதல் நாளான நேற்று ஒரே நாளில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியிலும் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். இவர்களைத் தவிர, பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மாநிலம் முழுவதும் 573 பேர் முதல் நாளிலேயே மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

சென்னையில் மட்டும் 16 தொகுதிகளில் மொத்தம் 47 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஆர்.கே.நகர் மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் தலா 7 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கொளத்தூர் தொகுதியில் 5 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், துறைமுகம், ஆயிரம் விளக்கு தொகுதிகளில் நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

வேட்புமனுத் தாக்கலை முன்னிட்டு தேர்தல் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வேட்பாளருடன் 4 நபர்கள் மட்டுமே அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மனுத்தாக்கல் செய்ய ஏப்ரல் 6-ஆம் தேதி கடைசி நாள் என்பதால், வரும் நாட்களில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் பெரும் திரளாக வந்து மனுத்தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version