தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த 9 பேருக்கு கோவை மகளிர் நீதிமன்றம் இன்று சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கியது. இந்த தீர்ப்பை பல்வேறு கட்சிகள், அதன் உட்பட திமுக, அதிமுக, தவெக, பாமக ஆகியவை வரவேற்ற நிலையில், பாஜகவும் வரவேற்றுள்ளது.

இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கோவை மகளிர் நீதிமன்றம் இன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), வசந்தகுமார் (27), சதீஷ் (28), மணிவண்ணன் (25), ஹேரேன் பால் (29), பாபு என்கிற பைக் பாபு (34), அருளானந்தம் (34), அருண்குமார் ஆகிய 9 பேரையும் சாகும்வரை சிறையில் அடைக்க வேண்டும் என்று நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்தார். பல பெண்களின் வாழ்வை சீரழித்து, தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் என்று உறுதி செய்யப்பட்டு, சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது மிகவும் வரவேற்பிற்குரியது.

பெண்கள் பாதுகாப்பை உருக்குலைக்கும் குற்றவாளிகள் நீதியின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை உணர்த்தும் வகையில் இத்தீர்ப்பு அமைந்துள்ளது. பாதிக்கப்படும் பெண்கள் அச்சமின்றி புகாரளிக்க தைரியமூட்டும் முன்னுதாரண தீர்ப்பு இது.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், போக்சோ வழக்குகளும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், குற்றமிழைக்க முயற்சிக்கும் கயவர்களுக்கு எச்சரிக்கை மணியாக இத்தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன். நீதியை நிலைநாட்ட போராடிய அனைவருக்கும், வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய நீதிமன்றத்திற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.

Share.
Leave A Reply

Exit mobile version