நீலகிரி தொகுதி எம்.பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2015-ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் ஆ.ராசா மற்றும் அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, என்.ரமேஷ், விஜய் சடரங்கனி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், மங்கள் டெக் பார் லிமிடெட் ஆகியோருக்கு எதிராக கடந்த 2023-ம் ஆண்டு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த குற்றப்பத்திரிக்கையில், குற்றம்சாட்டப்பட்ட காலத்தில் ஆராசா வருமானத்திற்கு அதிகமாக 579 சதவீதம் அதாவது ரூ.5.53கோடி சொத்து குவித்துள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டியது. இந்த வழக்கு சென்னை எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. ஆ.ராசா தரப்பில், வருமான வரி கணக்கு விவரங்களை சரிபார்க்க வேண்டியுள்ளதால் இந்த வழக்கின் சில ஆவணங்களை வழங்க வேண்டும் எனக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதற்கு சிபிஐ தரப்பில், ‘ஆ.ராசா தாக்கல் செய்துள்ள வருமான வரி விவரங்கள் அவரிடமே உள்ளபோது வழக்கு ஆவணங்களை எதற்காக கோர வேண்டும். சாட்சி விசாரணையின்போது அவர் அந்த ஆவணங்களைப் பெற்று சரிபார்க்கலாம். எனவே, வழக்கு ஆவணங்களை வழங்கக்கூடாது’ என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வருமான வரி கணக்கு தொடர்பான ஆவணங்களை வழங்க வேண்டுமென ஆ.ராசா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தார்.பின்னர் ஆ.ராசாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், ஜூலை 23-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என அறிவித்த நீதிபதி, அன்றைய தினம் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, இன்று(23.06.2025) ஆ.ராசா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து குற்றச்சாட்டு பதிவு ஒத்திவைக்கப்பட்டு வரும் 30ஆம் தேதி அவர் ஆஜராக உத்தரவிடப்பட்டது.