அட்சய திருதியை நன்னாள் என்பது ‘குறையாத செல்வம்’ தரும் நாளாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அட்சய திருதியை கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் மகாலட்சுமியின் அருள் நிலைத்திருக்கும் என்பதும், செல்வம் மென்மேலும் பெருகும் என்பதும் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இதற்காக நகைக்கடைகள் இப்போதே தயாராகி வரும் நிலையில், பொதுமக்கள் நல்ல நேரத்திற்காகக் காத்திருக்கின்றனர்.

இந்த ஆண்டு தங்கம் வாங்குவதற்கு மிக உகந்த நேரமாக, ஏப்ரல் 19-ம் தேதி காலை 10:49 மணி முதல் தொடங்கி, மறுநாள் ஏப்ரல் 20-ம் தேதி அதிகாலை 07:27 மணி வரை கணிக்கப்பட்டுள்ளது. இந்த நீண்ட சுப நேரத்தில் தங்களுக்கு விருப்பமான நேரத்தில் மக்கள் நகை வாங்கலாம். குறிப்பாக, வளர்பிறையில் வரும் இந்தத் திதியில் செய்யும் முதலீடுகள் பன்மடங்கு பெருகும் என்பதால், சிறிய அளவிலான தங்கம் அல்லது வெள்ளி நாணயங்களை வாங்குவதற்குக் கூட மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அனைவராலும் தங்கம் வாங்க இயலாது என்பதால், சாஸ்திரங்கள் சில எளிய தீர்வுகளையும் வழங்குகின்றன. தங்கம் வாங்க முடியாதவர்கள் மனவருத்தம் அடையத் தேவையில்லை; அதற்குப் பதிலாக கல் உப்பு, மஞ்சள் அல்லது மல்லிகைப் பூ ஆகியவற்றை வாங்கினாலும் தங்கம் வாங்குவதற்கு இணையான பலன்கள் கிடைக்கும் என்று ஆன்மீகப் பெரியோர்கள் கூறுகின்றனர். மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய இந்த மங்கலப் பொருட்களை அட்சய திருதியை அன்று வீட்டிற்கு வாங்கி வந்து வழிபடுவது, அந்த ஆண்டு முழுவதும் வறுமை நீங்கி சுபிட்சத்தை உண்டாக்கும் என்பது ஐதீகம்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version