தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கவுள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே கடலூரில் நேற்று (சனிக்கிழமை) நடைபெறவிருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் கன்னியாகுமரியில் இன்று ரோடு ஷோ நடத்த தவெக தரப்பில் அனுமதி கோரப்பட்டது.

இதற்காக மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வரும் விஜய் அங்கிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரிக்கு வருகை தந்தார். அப்போது விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கன்னியாகுமரியில் மகாதானாபுரம் ரவுண்டானா பகுதிக்கு வந்த விஜய் சைக்கிளில் சுற்றி வந்தார். இருபக்கமும் திரண்டு நின்ற தொண்டர்களை பார்த்து விஜய் கை அசைத்தார். இதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது, “காரைக்குடி மக்களுக்கும் வணக்கம் சொல்லிக்கொள்கிறேன். அன்றைக்கு அங்கே பேச முடியவில்லை. கன்னியாகுமரி மக்களை சந்தித்ததில் சந்தோசம். இங்கே சிலவற்றை அறிவிக்க இருக்கிறேன். தமிழ்நாடு சிட்டிசன் கார்டு வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்தின் தரவுகள் அதில் சேர்க்கும். வீட்டு வாசலில் அரசின் நலத்திட்டங்கள் போய் சேரும். ஏஐ மூலம் இது செயல்படுத்தப்படும்.

சட்டப்பேரவையில் மக்களின் மனுக்கள் குறித்து விசாரிக்க நேரம் ஒதுக்கப்படும். தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். தவெக ஆட்சியில் ஆவணங்களின் பெயரால் லஞ்சம் வாங்குவது, அலைக்கழிப்பதை அனுமதிக்க மாட்டோம். நலத்திட்டத்திற்காக விண்ணப்பிக்க வேண்டாம் வீடு தேடி அரசு திட்டம் வரும். நமது அரசு அமைந்த ஆறு மாதங்களுக்குள் “வெற்றி தமிழ்நாடு சூப்பர் ஆப்” உருவாக்கப்படும். பல சேவைகள் அந்த செயலியில் இருக்கும்.

10,000 கையெழுத்துக்களுடன் மனு அளித்தால் அரசு பதில் அளிப்பது கட்டாயமாக்கப்படும். பத்து லட்சம் பேர் மனு அளித்தால் சட்டசபையில் விவாதிக்கப்படும். புதிய இணையதளத்தை உருவாக்கி அரசுக்கு முன்வைக்க உள்ள ஆலோசனைகளை வழங்கலாம். தமிழக அரசின் சேவைகள் தாமதமானால் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒரு நாள் முழுவதும் மக்களின் மனுக்களுக்காகவே ஒதுக்கப்படும். தமிழ்நாட்டில் முதல்முறையாக AI CITY அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version